சட்டசபையில் எளிமையான விளக்கங்களால் எல்லோரையும் திக்குமுக்காட வைத்த பேரறிஞர் அண்ணா: சுப.வீரபாண்டியன்
சென்னை: சமூக நீதி, ஒரு அரசுக்கான கடன் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் கூட சட்டசபையில் மிக எளிமையான விளக்கங்களால் எதிர்க்கட்சிகளை திணற வைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விளக்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெ. ரவீந்தரன் ஏற்பாடு செய்த 'பேரறிஞர் அண்ணாவும் சட்டமன்றமும்' என்ற காணொலி கருத்தரங்கில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசியதாவது:
அண்ணா சட்டசபையில் பணியாற்றிய காலம் 7 ஆண்டுகளுக்கும் மிகவும் குறைவானது. 1957-1962; 1967-1969 ஆகிய குறுகிய கால ஆண்டுகளில்தான் சட்டசபையில் பணியாற்றினார். ஆனால் சட்டசபையில் இந்த குறுகிய காலத்தில் அண்ணா ஆற்றிய உரையும் பணியும் எதிர்காலத்துக்கும் வழிகாட்டக் கூடியவை.
இன்றைக்கு மும்மொழித் திட்டத்தை எதிர்க்கிறோம் என்று மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக இருக்கிற ஆளும் கட்சியும் சொல்கிற்து எனில் இதற்கு அண்ணாவே காரணம். ஏனெனில் அன்று இதற்க்கான விதையை ஊன்றியவர் அண்ணா. அண்ணாவிடம் இருந்து அவர்களால் விலகிச் செல்ல முடியாத அளவுக்கு அண்ணாவின் வழிமுறை உறுதியானதாக உள்ளது.
அண்ணா முதல்வராக இருந்த போது புதுமுக வகுப்புக்கான கட்டண சலுகை அறிவிக்கப்பட்ட போது சமூக நீதிக்கான விளக்கத்தை அண்ணா இப்படி சொன்னார்... தொகையை பார்க்காமல் தொக்கி நிற்கும் சமூக நீதியைப் பாருங்கள்.. சமூக நீதி என்பது எல்லோரும் சமம் என்பது அல்ல.. எல்லோருக்குமமான சமமான வாய்ப்பு என்பதுதான் என்றார்.
அதேபோல் பட்டியல் இன மக்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டதற்காக ஹரிஜன மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சொன்னார்கள். அண்ணாவோ, ஹரிஜன மக்களை ஒடுக்கியவர்கள் நாம். ஆகையால் இன்றைக்கு நாம் அவர்களது ஒடுக்கப்பட்ட உரிமையைத்தான் திருப்பி தந்திருக்கிறோம். இது உதவி அல்ல.. நாம் செய்த தவறுகளுக்கான பரிகாரம் என்றார் அண்ணா.
முதுகுளத்தூர் கலவரத்தின் போது தந்தை பெரியார், முத்துராமலிங்க தேவரை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற வேகமான நிலைப்பாட்டை மேற்கொண்டார். ஆனால் அனைத்து சமூக வாக்குகளையும் பெற்று சட்டசபைக்குள் சென்ற அன்ணா, இந்த பிரச்சனையில் நயமாகவே கையாண்டார். ஜாதிய மோதல்கள் இருக்கக் கூடாது என்பதை கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசுவதாக வலியுறுத்தினார் அண்ணா.
1957-ல் அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்த போது அதை தடுக்க 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை காமராஜர் அரசு கொண்டு வருகிறது. அப்போது அண்ணாவும் பெரியாரும் எதிர் எதிர் திசையில் இருந்தனர். இதனால் எல்லோரும் அண்ணா எப்படி பேசுவார் என எதிர்பார்த்தனர். அண்ணாவோ, சட்ட எரிப்பை நியாயப்படுத்தவும் இல்லை. 3 ஆண்டு தண்டனை சட்டத்தை ஆதரிக்கவும் இல்லை. மாறாக பெரியாரின் போராட்டத்தில் இருக்கிற- அதாவது ஜாதியை ஒழிக்க வேண்டு என்ற கோரிக்கைக்கான நியாயத்தை சுட்டிக்காட்டினார் அண்ணா. ஜாதியை ஒழிக்கும் அம்சங்களை அரசியல் சாசனத்தில் இடம்பெற செய்துவிட்டால் இத்தகைய போராட்டங்கள் தேவை இல்லை என பிரச்சனையை அண்ணா கையாண்டார். ஆகையால் ஜாதிய ஒழிக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றார் அண்ணா.
அண்ணா முதல்வரான போது 1967-ல் முதலாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிற போது முந்தைய காங்கிரஸ் அரசின் கடன்களை குறிப்பிட்டுப் பேசினார். ஆனால் ரூ400 கோடிக்கு கடன் வாங்கி ரூ500 கோடிக்கு சொத்துகளை சேர்த்துள்ளோம் என காங்கிரஸ் பதில் தந்தது. இதற்கு அண்ணா சொன்ன உவமைகள் அருமையானவை. அல்சேசன் நாயை கடன் வாங்கி வைத்துக் கொண்டு குட்டிபோட்டு விற்று பணத்தை திருப்பித் தருவதாக நீங்கள் சொல்கிறீர்கள்.. நீங்கள் வாங்கியதே ஆண் நாய் அல்லவா?. அது எப்படி குட்டி போடும்? நீங்கள் கடனை எப்படி திருப்பி அடைப்பீர்கள்? அதேபோல் மத்தியிலேயே எங்கள் ஆட்சி இருக்கிறது என காங்கிரசார் சொன்ன போது, ஒருவர் நான்தான் பில் கலெக்டர்- எங்க அண்ணன் சப் கலெக்டர் என்று சொன்ன கதையாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டார் அண்ணா.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கிறோம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை வந்துவிட்டது என்றார். ஆனால் அண்ணாவோ, அதனால் தமிழகத்துக்கு என்னதான் பயன்? மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்குமா? ரயில் பெட்டி மூலமான வருமானம் தமிழகத்துக்கு கிடைக்குமா? என எதிர்க்கேள்வி கேட்டார் அண்ணா. அண்ணாவி வரலாற்று சிறப்புமிக்க சட்டசபை உரைகளில் மிக முக்கியமானது தமிழ்நாடு பெயர் மாற்றம் தீர்மானத்தின் போது பேசியதுதான். இவ்வாறு சுப. வீரபாண்டியன் உரையாற்றினார். மேலும், பேரறிஞர் அண்ணா அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்லும்போது தந்தை பெரியார் அன்றைய மதிப்பில் ரூ25,000 நிதி கொடுத்து உதவினார் என்ற வரலாற்று தகவலையும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.