Porivilankai Recipe: புரோட்டீன் சத்து நிறைந்த பொரிவிளங்காய் உருண்டை செய்வது எப்படி தெரியுமா?
சென்னை: மாலை நேர சிற்றுண்டியாகவும், அதே நேரம் சத்தான உணவாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கனும்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா. எளிமையாகவும், வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டும் சட்டென செய்யக்கூடிய பொரிவிளங்காய் உருண்டையை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
அலுவலகத்தில் இருந்து வரும் கணவன், மனைவியும் சரி, பள்ளிகளில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளும் சரி வீட்டிற்கு வந்ததும் முதலில் தேடுவது ஏதாவது ஸ்நாக்ஸ் இருக்கிறதா என்றுதான். எண்ணெய் பலகாரம் வேண்டாம், கடையில் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று நினைத்தாலும் வேறு வழியில்லாமல் அதைத்தான் ஒவ்வொரு வீட்டிலும் செய்ய வேண்டியதிருக்கும்.

வீட்டில் பலகாரம் செய்வதற்கு டைம் இல்லை, ஈஸியாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் சத்து நிறைந்த ஸ்நாக்ஸாகவும் இருக்க வேண்டும் என்று நல்ல ரெசிபியை தேடுறீங்களா.. இதோ உங்களுக்காகத்தான் புரோட்டீன் சத்து நிறைந்த பொரிவிளங்காய் உருண்டை. ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம். குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 200 கிராம்
பச்சை பயறு - 100 கிராம்
நெய் - சிறிதளவு
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு (சிறிதாக நறுக்கி நெய் அல்லது தேங்காய் எண்ணெயில் வதக்கியது)
வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) - 1 கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
வெல்லம் - 400 கிராம்
செய்முறை:
1. புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்து நைஸாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பயறையும் சிவக்க வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
2. நறுக்கிய தேங்காய் சில்லுகளை நெய் அல்லது தேங்காய் எண்ணெயில் வதக்கிக் கொள்ள வேண்டும்.
3. அரைத்து வைத்த அரிசி மற்றும் பச்சைப் பயறு மாவில் சிறிதளவு சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள் தேவையான அளவு, வேர்க்கடலை, பொட்டுக் கடலை, வதக்கிய தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
4. வெல்லத்தில் சிறிதளவு நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்னர், அதனை அடுப்பில் ஏற்றி கொதிவந்தவுடன் வடிகட்டவும். பின்னர், மீண்டும் அடுப்பில் ஏற்றி ஒரு கொதி அதிகமாக விட்டு நெய் சேர்க்கவும்.
5. பின்னர், மாவுக் கலவையில் வெல்லப் பாகை கொட்டி நன்கு கலக்கவும்.
6. மாவுக் கலவையை உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். பொரிவிளங்காய் உருண்டை ரெடி.
இந்த பொரி விளங்காய் உருண்டையை ஒரு மாதம் வரை கூட வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.











Click it and Unblock the Notifications