தீபாவளி-எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம் எது?
தீபாவளிப் பண்டிகை வருகிற திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளிப் பண்டிகையின் முக்கிய அம்சமே கங்கா ஸ்நானம் எனப்படும் எண்ணெய்க் குளியல்தான். இதை நல்ல நேரத்தில்தான் செய்ய வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக்குளித்த பின்னர் புத்தாடை அணிந்து, சாமி கும்பிட்டு, இனிப்புகளை சாப்பிட்டு விட்டு பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவது வழக்கம்.
இதில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க அதிகாலை 3.30 மணி முதல் 6 மணி வரை உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி அஸ்தம் நட்சத்திரத்தில் வருகிறது. அஸ்தம் சூரியனின் நட்சத்திரம் ஆகும். இது கூடுதல் சிறப்பாகும்.
தீபாவளிக்கு முன்தினம் இரவிலேயே வெந்நீர் வைக்கும் பாத்திரத்தில் சுண்ணாம்பு அல்லது மஞ்சளில் சூரியன், சந்திரன் படத்தை வரைந்து, தண்ணீர் நிரப்பி, ஆல், அரசு, அத்தி, புசு மற்றும் மாவிலங்க பட்டை போட்டு வைக்க வேண்டும். அதிகாலையில் அந்த தண்ணீரை சூடுபடுத்தி குளிக்க வேண்டும்.
அன்றைய தினம் வெள்ளை, ரோஸ், சிவப்பு, பொன் நிற ஆடைகள் அணிவது சிறப்பாகும்.
தீபாவளிக்கு முன் இரவும், தீபாவளி அன்றும், மறுநாளும் இரவில் பட்டாசு கொளுத்தி, வெடி வெடித்து கொண்டாடலாம்.
பொதுவாக அமாவாசை தினத்தில் தீபாவளி வரும். இந்த ஆண்டு மறுநாள் தான் அமாவாசை வருகிறது. தலை தீபாவளி தம்பதியருக்கு இந்த ஆண்டு தீபாவளி தினம் அனைத்து வகையிலும் குதூகலம் அளிக்கும் நாளாக அமைந்துள்ளது.
தீபாவளியையொட்டி கேதார கவுரி விரதம் வருகிறது. தாலி பாக்கியம் வேண்டி பெண்கள் இந்த விரதம் மேற்கொள்கிறார்கள். வீடுகளில் இனிப்பு பட்சணங்கள் தயாரித்து அவற்றை கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்து அனைவருக்கும் கொடுத்து சாப்பிடுவது மகிழ்ச்சியைத் தரும்.
வட இந்தியாவில் தீபாவளியையொட்டி அமாவாசை முடிவில், பிரதமை ஆரம்பத்தில் லட்சுமி குபேர பூஜை நடத்தி தொழில், வர்த்தக நிறுவனங்களில் புதுக்கணக்கு போடுகிறார்கள். இந்த ஆண்டு 28-ந் தேதி குபேர பூஜைக்கு உகந்த நாள் ஆகும். தீபாவளியும், குபேர பூஜையும் அடுத்து அடுத்து வருவதால், இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது.