அபிராமி அந்தாதி பாடல் வரிகள் | 100 பாடல்களின் ஆன்மிகப் பயன்கள் மற்றும் சிறப்புகள்

Subscribe to Oneindia Tamil

தமிழ் பக்தி இலக்கியங்களில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் அபிராமி அந்தாதி, 100 அரிய பாடல்களால் ஆன ஒரு பக்தி மாலை ஆகும். திருக்கடையூரில் வாழ்ந்த அபிராமி பட்டர், அபிராமி அம்மனின் அருளால் பேரானந்த நிலையில் இந்த அந்தாதியைப் பாடியதாக பரம்பரையாக நம்பப்படுகிறது. இந்தப் பாடல்கள் பக்தி, ஞானம், ஆன்மிக உணர்வு மற்றும் இறைஅருள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.

Abirami Anthathi Lyrics

அபிராமி அந்தாதியின் இலக்கியச் சிறப்பு

"அந்தாதி" என்ற சொல்லுக்கு "அந்தம்" மற்றும் "ஆதி" என்பதன் இணைவு எனப் பொருள். அதாவது, ஒரு பாடலின் இறுதிச்சொல் அடுத்த பாடலின் தொடக்கமாக வரும் வகையில் அமைந்த கவிதை வடிவமே அந்தாதி ஆகும். இந்த இலக்கண அமைப்பு, அபிராமி அந்தாதிக்கு தனித்துவமான அழகையும் தொடர்ச்சியான பக்தி ஓட்டத்தையும் அளிக்கிறது.

ஒவ்வொரு பாடலுக்கும் ஏன் தனிப்பட்ட பயன் கூறப்படுகிறது?

அபிராமி அந்தாதியில் உள்ள ஒவ்வொரு பாடலும், பக்தர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல பலனை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. மனஅமைதி, செல்வ வளம், கல்வி முன்னேற்றம், குடும்ப நலன், நோய் நீக்கம், ஆன்மிக உயர்வு போன்ற பல்வேறு நன்மைகள் ஒவ்வொரு பாடலுக்கும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் தங்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பாடல்களைப் பாராயணம் செய்து வருகின்றனர்.

கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.

100 பாடல்களும் மற்றும் அவற்றின் ஆன்மிகப் பயன்களும்

1. ஞானமும் நல் வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே

2. பிரிந்தவர் ஒன்று சேர

துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே

3.குடும்பக்கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு
செறிந்தேன்! உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே

4.உயர்பதவிகளை அடைய

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே

5.மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையாள்
வருந்திய வஞ்சி மருங்கல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

6.மந்திர சித்தி பெற

சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திருமந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே

7.மலையென வருந்துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவிதளர் விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கியென்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே

8.பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை யெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி தைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

9.அனைத்தும் வசமாக

கருத்தன எந்தைதன் கண்ணன் வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தேன் முன் நிற்கவே

10.மோட்ச சாதனம் பெற

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே

11.இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணாரவிந்தத் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

12.தியானத்தில் நிலை பெற

கண்ணியதுன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியதுன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணிய துன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

13.வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக்ண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

14.தலைமை பெற

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே

15.பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

16. முக்காலமும் உணரும் திறன் உன்டாக

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே

17.கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசெய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசயமாக வன்றோ வாம பாகத்தை வவ்வியதே

18.மரணபயம் நீங்க

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளிநிற்கவே

19.பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின்திரு மேனியைப்பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே

20.வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

21.அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில்தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே

22.இனிப்பிறவா நெறி அடைய

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்திங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே

23.எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

24.நோய்கள் விலக

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே

25.நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்துன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனியுன்னை யான்மறவாமல் நின்று ஏத்துவனே

26.சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

27.மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்தழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே

28.இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சொல்லும் பொருளும் என நடமாடும துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே

29.எல்லா சித்திகளும் அடைய

சித்தியும் சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பரா
சக்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே

30.விபத்து ஏற்படாமல் இருக்க

அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கினி நான் என்செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே

31.மறுமையில் இன்பம் உண்டாக

உமையும் உமையரு பாகரும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கின்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

32.துர்மரணம் வராமலிருக்க

ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின்பாதமென்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே

33.இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க

இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக்குவிமுலை யாமைளக் கோமளமே
உழைக்குமூ பொழுது உன்னையே அன்னையே என்பன் ஒடிவந்தே

34.சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்க்கதிர் ஞாயிறும் திங்களுமே

35.திருமணம் நிறைவேற

திங்கள் பசுவின் மணநாறுஞ் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்துமோ தரங்கக்கடலுள்
வெங்கட் பணியனை மேல்துயி கூரும் விழுப்பொருளே

36.பழைய வினைகள் வலிமை அழிய

பொருள் பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என்மனத்து வஞ்சத்து
இருளேது மின்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

37.நவமணிகளைப் பெற

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே

38.வேண்டியதை வேண்டியவாறு அடைய

பவளக்கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

39.கருவிகளைக் கையாளும் வலிமை பெற

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகளுண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என்முறை நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே

40.பூர்வ புண்ணியம் பலன்தர

வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே

41.நல்லடியார் நட்புப் பெற

புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியம் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணியிங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே

42.உலகினை வசப்படுத்த

இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே

43.தீமைகள் ஒழிய

பரிபுரச்சீறடிப் பாசங்குசை பஞ்சபாணியின் சொல்
திருபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுரவஞ்சரை அஞ்சங்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரைமேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே

44.பிரிவுணர்ச்சி அகல

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினன் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே

45.உலகோர் பழியிலிருந்து விடுபட

தொண்டு செய்யாது நின்பாதந்தொழாது துணிந்திச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன்
கண்டு செய்தால் அது கை தவமோ அன்றிச் செய்தவேமா
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றேபின் வெறுக்கையன்றே

46.நல்நடத்தையோடு வாழ

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரைமிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சையுண்டு
கறுக்குந் திருமிடற்றாள் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்குந் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே

47.யோக நிலை அடைய

வாழும் படியொன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம்
ஏழும் பருவரை யெட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே

48.உடல்பற்று நீங்க

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்பொது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே

49.மரணத்துன்பம் இல்லாதிருக்க

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மருகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்த அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே

50.அம்பிகையை நேரில் காண

நாயகி நான்முகி நாராயணி கை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே

51.மோகம் நீங்க

அரணம் பொருளென்று அருள் ஒன்றிலாத அகரர்தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே

52.பெருஞ் செல்வம் அடைய

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலைஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

53.பொய்யணர்வு நீங்க

சின்னஞ்சிறிய மருங்கினிற் சாத்திய செய்யப்பட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலுங்கண் மூன்றுங் கருத்தில் வைத்துத்
தன்னந் தனியிருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே

54.கடன் தீர

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்த நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

55.மோன நிலை எய்த

மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற (து)
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடுவெங்குவமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவ தொன்றில்லையே

56.யாவரும் வசமாக

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சின் உள்ளே
பொன்றாது நின்ற புரிகின்றவா இப்பொருளறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே

57.வறுமை ஒழிய

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே

58.மன அமைதி பெற

அருணாம் புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல் நல்லாள் தகைசேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர

தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அரியாரெனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே

60.மெய்யுணர்வு பெற

பாலினுஞ் சொல் இனியாய் பனிமாமலர்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே

61.மாயையை வெல்ல

நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலை மகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே

62.எத்தகைய அச்சமும் அகல

தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய் அடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கை கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே

63.அறிவு தெளிவோடு இருக்க

தேறும்படி சில ஏதுவும் காட்டி முன்செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே

64.பக்தி பெருக

வீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனிப்ரகாசமன்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் சுகனமும்

65.ஆண்மகப்பேறு அடைய

ககனமும் வானும் புவனமும் காணவில் காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி செய்த வல்லபமே

66.கவிஞராக

வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும்பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே

67.பகைவர்கள் அழிய

தோத்திரம் செய்து தொழுது மின்போலும் நின்தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாறும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பாரெங்குமே

68.நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் உருகு சுவையளி ஊறொளி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாருந் தவம் உடையார் படையாத தனம் இல்லையே

69.சகல சௌபாக்கியங்களும் அடைய

தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

70.நுண்கலைகளில் சித்தி பெற

கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே

71.மனக்குறைகள் தீர

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே

72.பிறவிப்பிணி தீர

என்குறை தீரநின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார்குறை காண் இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே

73.குழந்தைப்பேறு உண்டாக

தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

74.தொழிலில் மேன்மை அடைய

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவர் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே

75.விதியை வெல்ல

தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

76.தனக்கு உரிமையானதைப் பெற

குறித்தேன் மனத்தில் நின் கோலமெல்லாம் நின்குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தேன் குடிபுகு தும்பஞ்பாண பயிரவியே

77.பகை அச்சம் நீங்க

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே

78.சகல செல்வங்களையும் அடைய

செப்பும் கனக கலசமும் போலுந் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே

79.கட்டுகளில் இருந்து விடுபட

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே

80.பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட

கூட்டியவா என்னைத் தன்னடி யாரில் கொடியவினை
ஒட்டியவா என்கண் ஒடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடமாடகத் தாமரை ஆரணங்கே

81.நன்னடத்தை உண்டாக

அணங்கே அணங்குகள் நின்பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரோடும்
பிணங்கேன் அறிவு ஒன்றிலேன் என்கண் நீ வைத்த பேரளியே

82.மன ஒருமைப்பாடு அடைய

அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே

83.ஏவலர் பலர் உண்டாக

விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக் கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே

84.சங்கடங்கள் தீர

உடையாளை ஒல்குசெம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னையினிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

85.துன்பங்கள் நீங்க

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே

86.ஆயுத பயம் நீங்க

மால் அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே

87.செயற்கரிய செய்து புகழ்பெற

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாது நின்திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகங் கொண்டாளும் பராபரையே

88.எப்போதும் அம்பிகை அருள்பெற

பரமென்று உனை யடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரமன்று இவனென்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரமன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதி அயன்
சிரமொன்று செற்றகையான் இடப்பாகம் சிறந்தவளே

89.யோக சித்தி பெற

சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற
உறக்கந்தர வந்து உடம்போடு உயிர்உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

90.கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க

வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

91.அரசாங்கச் செயலில் வெற்றி பெற

மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன் அனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே

92.மன நிலை பக்குவமடைய

பதத்தே உருகிநின் பாதத்திலே மனம்பற்றி உன்றன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன் அவர்போன வழியும் செல்லேன்
முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே

93.உள்ளத்தில் ஒளியுண்டாக

நகையே இஃதிந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலைமானே முதுகண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே

94.மனநிலை தூய்மையாக

விரும்பித்தொழும் அடியார் விழி நீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பி ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே

95.மன உறுதி பெற

நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயுமில்லை உனக்கேபரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாதகுணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே

96.எங்கும் பெருமை பெற

கோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை ஏதமிலாளை எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவர் எழுபாருக்கும் ஆதிபரே

97.புகழும் அறமும் வளர

ஆதித்தன் அம்புலி அங்கி, குபேரன் அமரர்தங்கோன்
போதிப் பிரமன் புராரி முராரி பொதிய முனி
காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

98.வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற

தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்த ஆறுங் கரந்த தெங்கே
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே

99.அருள் உணர்வு வளர

குயிலாய் இருக்கும் கடம்பா அடவியிடைக் கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

100.அம்பிகையை மனத்தில் காண

குழையைத் தழுவிய கொன்றையற் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே

நூற் பயன்

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே

விளக்கம்

அபிராமி அம்மனை பக்தியுடன் நினைத்து இந்த அந்தாதியைப் பாராயணம் செய்வோருக்கு மனநிம்மதி, ஆன்மிகத் தெளிவு மற்றும் இறைஅருள் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அபிராமி அந்தாதி, பக்தி இலக்கியமாக மட்டுமல்லாமல், தமிழின் இலக்கிய வளத்தையும் எடுத்துக்காட்டும் அரிய படைப்பாகவும் கருதப்படுகிறது.

குறிப்பு

இந்தப் பாடல் வரிகள் பல பாரம்பரிய நூல்கள் மற்றும் கோவில் கல்வெட்டு வடிவங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. குறிப்பாக வெள்ளீஸ்வரர் கோவில் கல்வெட்டில் காணப்படும் அபிராமி அந்தாதி வடிவத்துடன் இவை ஒத்துப்போகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+