Arudra Darisanam 2026: மார்கழி திருவாதிரை.. சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்.. விடிய விடிய அபிஷேகம்
சென்னை: தமிழகத்தில் உள்ள சிவாலங்களில் இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற்றது.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது. வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை வணங்கினார். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, அனைத்து சிவாலயங்களிலும் விடிய விடிய அபிஷேகம் நடைபெற்றது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜர், பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோவில்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜா் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று மகா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், ஸ்வர்ணாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து, பஞ்சமூா்த்திகள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றம். பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற்றது. நாளை இரவு பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. ஜனவரி 5ஆம் தேதி ஞானப்பிரகாசா் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications