இன்று மகா சிவராத்திரி! இரவு முழுக்க கண் விழிக்க முடியாதவர்கள்! இந்த அரை மணி நேரம் விழித்தால் போதும்!
சென்னை: மகா சிவராத்திரியான இன்று இரவு முழுக்க கண் விழிக்க இயலாதவர்கள் இந்த குறிப்பிட்ட காலத்தில் கண் விழித்தாலே அதற்குரிய பலன் கிடைத்துவிடும் என ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
மகாசிவராத்திரி, பிப்ரவரி 15 -ஆம் தேதி இன்று மாலை 5.04 மணிக்கு தொடங்கி 16 ஆம் தேதி மாலை 5.34 மணி வரை நடைபெறும். இந்த சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கொண்டாடப்படுவதாகும். அதாவது குளிர்காலத்தில் இருந்து வசந்த காலத்திற்கு வருவதை உணர்த்தும் ஒரு பூஜை ஆகும்.

மகாசிவராத்திரி தினத்தன்று சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவதாக இந்து சமயத்தவரால் பரவலாக நம்பப்படுகிறது. இந்த புனித நாளில், அனைத்து சிவன் கோயில்களிலும் நான்கு கால சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.
பக்தர்கள் காலையில் நீராடிய பிறகு, உணவு உட்கொள்ளாமல் விரதத்தை மேற்கொள்வார்கள். விரதக் காலத்தில் சிவபெருமானின் நாமங்களை இடைவிடாமல் உச்சரிப்பதுடன், சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். மேலும், பழங்கள், தேன், நெய், இனிப்புகள், பால் போன்ற பல்வேறு புனித நிவேதனங்களை சிவபெருமானுக்கு பக்தியுடன் படைத்து வழிபடுவார்கள்.
இரவு முழுவதும் பக்தர்கள் கோயிலிலேயே தங்கி, சிறப்புப் பூஜைகளில் தீவிரமாகப் பங்கேற்று, சிவபெருமானின் பேரருளைப் பெறுகின்றனர். இந்த நிலையில் மகாசிவராத்திரிக்கு எல்லோராலும் கண் விழிக்க முடியாத சூழல் எழும். அவர்கள் எந்த நேரத்தில் விழிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
மகா சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும். வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களால் சிவராத்திரிக்கு இரவு கண் விழிக்க முடியாது. அது போல் வேலைக்கு செல்பவர்கள் , இரவு கண்விழித்தால் அடுத்த வேலைக்கு செல்வதில் கஷ்டமாக இருக்கும்.
இவர்கள் மகா சிவராத்திரியின் பலனை அடைய என்ன வழி என்பது குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், மூன்றாம் கால பூஜையில் விழித்திருக்கலாம்.
அதாவது அம்பாள், சிவபெருமானை பூஜித்த காலம் இதுவாகும். இந்த பூஜை காலமான 11.45 மணி முதல் 12.30 மணி வரை ஒரே ஒரு வில்வமாவது வைத்து யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு எல்லா விதமான நலன்களும் கிடைக்கும்.
பொதுவாக சிவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும் என்றால் நம் மனதில் இருக்கும் ஆணவத்தை எல்லாம் அகற்றி இந்த விரதம் இருக்கலாம். இவ்வாறு தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications