திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 21: பகவானிடம் அர்ப்பணித்துக் கொண்டால் தப்பி ஓட முடியாது!
சென்னை: மார்கழி மாதம் 21-ஆம் நாள் இன்று! இறைவன் மீதான அச்சத்தால் மன்னாதி மன்னர்கள் அவர் காலடியில் விழ காத்திருக்க, ஆயர்குலப் பெண்கள் தாங்கள் அத்தகைய பயந்தவர்கள் அல்ல எனப் பெருமையுடன் கூறுகின்றனர்.
'வா' என்று நாங்கள் அழைத்தால் இறைவன் வந்தே ஆக வேண்டும் என்றும், வர மறுத்தால் தங்கள் அன்பெனும் கயிற்றால் அவரைக் கட்டிப் போட்டு, அதிலிருந்து தப்பவே முடியாது என்றும் அவர்கள் சவால் விடுகின்றனர்.

ஆண்டாள், தனது மாலையில் புதைந்திருந்த ஒரு தலைமுடியால் ரங்கநாதரைக் கட்டி வசப்படுத்திய செயல் இதற்குச் சிறந்த உதாரணமாகும். பகவானிடம் ஒருவன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டால், அவர் ஒருபோதும் அவனிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது என்பதே இந்தத் தமிழ் பக்திப் பாடலின் ஆழமான உட்கருத்து.
திருப்பாவை பாடல் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்: பால் பெருகி வழியும் பசுக்களைக் கொண்ட நந்தகோபனின் மகன் கண்ணன். வேதங்களால் போற்றப்படும் வலிமை மிக்கவராகவும், வேதங்களாலும் அறிந்துகொள்ள முடியாத பேரொளியாகவும், உலகிற்கே ஒளி தரும் சுடராகவும் இருக்கும் அவர் கண் விழிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் முக்கியப் பிரார்த்தனை. எதிரிகள் பலமிழந்து அவர் முன் மண்டியிடுவதுபோல, பக்தர்களும் அவர் திருவடிகளைப் புகழ்ந்து பாட ஆவலுடன் காத்திருக்கின்றனர். தங்கள் கோரிக்கைகளை அவர் ஏற்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 1
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பாடல் விளக்கம்: சேற்றில் மலர்ந்த செந்தாமரை வயற்காடுகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானை, பக்தர்கள் நந்திக்கொடிக்குரியவராகவும் வாழ்வின் முதல் பொருளாயும் போற்றுகின்றனர். பொழுது புலர, பூவடி மலர் தூவி வழிபட வந்தோர், அழகிய முகத்தில் புன்னகையுடன் அருள் வேண்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications