திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 14: கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது! ஆண்டாளின் கோபம்!
சென்னை: மார்கழி மாதம் 14-ஆம் நாள் இன்று! எப்போதும் கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது, ஆனால் அதை காப்பாற்ற வேண்டும்.
இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என வாக்கு கொடுத்துவிட்டு அதை செய்யாமல் ஏமாற்றுபவர்களை கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள்.

திருப்பாவை பாடல் 14
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: அதிகாலையில் மற்றவர்களை எழுப்புவதாக உறுதியளித்த பெண் ஒருவர், தன் வாக்கை இன்னும் நிறைவேற்றவில்லை. விடியலின் அறிகுறிகளாக, அவரது வீட்டின் பின் தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் பூத்துள்ளன; ஆம்பல் மலர்களோ வாடி தலைகவிழ்ந்துவிட்டன.
காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச, திருச்சங்கு முழக்கத்திற்காக கோயில்களை நோக்கிச் செல்கின்றனர். சங்கும் சக்கரமும் ஏந்தி, தாமரை போன்ற விரிந்த கண்களுடைய கண்ணனைப் போற்றிப் பாட வேண்டிய இக்கணம் வரை, அந்தப் பெண் துயில் எழவில்லை.
திருவெம்பாவை பாடல் 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: ஆன்மிக மரபுகளின்படி, குளிர்ந்த நீரில் நீராடுவது ஒரு புனிதச் சடங்கு. அந்நேரம், ஆண்கள் அணியும் ஆபரணங்களும், பெண்களின் கூந்தல் மலர்களும் அசைந்தாட, நறுமணத்தால் மொய்க்கும் வண்டுகளின் அழகான காட்சி சித்தரிக்கப்படுகிறது.
இத்தகைய நீராடலில், சித்தம்பல நடனமாடும் சிவபெருமானின் புகழ் கொண்டாடப்படுகிறது. வேத சாரமாக விளங்கும் சிவனின் திருநாமம் உச்சரிக்கப்படும்; திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாய் அருளும் அவரது மாபெரும் மகிமைகள் நினைவு கூரப்படும்.
அவரது மார்பில் தவழும் கொன்றை மாலையின் பெருமையும், முதலும் முடிவும் இல்லாத இறைவனின் புகழும் இங்குப் போற்றப்படும். பந்த பாசங்களினின்று விடுவிக்கும் தாயுமான சிவனின் பாத கமலங்களைப் பாடி நீராடுவதே இவ்வழிபாட்டின் சாரம்.












Click it and Unblock the Notifications