மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன்! சபரிமலையில் தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
திருவனந்தபுரம்: மண்டல பூஜை- மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு இணையவழியில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது என திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது. அது போல் பக்தர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டமும் இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான சபரிமலை சீசன் வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜை என 62 நாட்கள் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.

இந்த சீசனில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.
தினமும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் மூலமும் ஐயனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அத்துடன் பக்தர்களுக்கான விபத்து இன்சூரன்ஸ் திட்டம், கடந்த ஆண்டு 4 மாவட்டங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இன்று கேரளாவில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் ரூ 5 லட்சம் காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சபரிமலையில் பணியாற்றும் தேவஸ்வம்போர்டு நிரந்தர மற்றும் ஒப்பந்த கூலி தொழிலாளர்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை பயணத்தில் மரணமடையும் பக்தர்களின் உடலை கேரளாவுக்குள் கொண்டு செல்ல ரூ.30 ஆயிரமும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ. 1 லட்சமும் ஆம்புலன்ஸ் கட்டண தொகையாக வழங்கப்படும்.
நிலக்கல் முதல் சன்னிதானம் வரை உள்ள பாதைகளில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தால் இதுவரை உதவித் தொகை ஏதும் வழங்கப்பட்டதில்லை. ஆனால் இந்த ஆண்டு மரணம் அடைபவர்களுக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இன்சூரன்ஸ் உதவித் தொகை கிடைக்க ஆன்லைன் புக்கிங் முன்பதிவு கூப்பன் பரிசீலிக்கப்படும் என்பதால் அனைத்து பக்தர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications