ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர குவியும் மக்கள்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மதுரை: தமிழகத்தில் ஆடி அமாவாசை இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஒருவரது குடும்பத்தில் தீராத நோய்கள் இருக்கும், பிள்ளைகளுக்கு திருமணத்தடை ஏற்படும், எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேராமல் போகும், கடன் பிரச்சினை அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர், கணவன் மனைவிக்குள் பிரிவுகள் வரும் குடும்பத்தில் சண்டை சச்சரவு என தினம் தினம் குருச்ஷேத்திர போர்க்களமாக வீடு இருக்கும். இதற்குக் காரணம் மறைந்த முன்னோர்களுக்கு முறையாக எள்ளும் நீரும் கொடுக்காததாலேயே ஆகும்.

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு அமாவாசை சிறந்த நாள் அதிலும் ஆடி அமாவாசை நாளில் புண்ணிய ஸ்தலங்களுக்கு நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதனால், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆடி அமாவாசை தினத்தில் பலர் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வ கோயில்களுக்கு சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்றைய தினம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். 22 தீர்த்தங்களில் நீராடி பல மணி நேரம் காத்திருந்து ராமநாதசுவாமியை வழிபட்டனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் குவிந்த ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு குவிந்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினார்கள். தாமிரபரணி ஆற்று படித்துறை, கல்லிடைகுறிச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவையாறில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடி புஷ்யமண்டப படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதே போல ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் அளித்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் தங்குவதற்கு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications