மார்கழி திருவாதிரை.. சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்.. சிவ ஆலயங்களில் நடராஜருக்கு விடிய விடிய அபிஷேகம்
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.மார்கழி திருவாதிரை திருவிழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவ ஆலயங்களில் உள்ள நடராஜருக்கு குளிர குளிர 32 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை வணங்கினார். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் தோற்றுவித்த ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ரா நாளில் தரிசித்தாலே பலன் ஆகும்.

சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு இரத்தின சபை, சிதம்பரம் கனக சபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபையாக போற்றப்படுகிறது. இந்த ஐந்து சபைகளிலும் ஆருத்ரா தரிசன விழா இன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு திருவாதிரைக்களி படைத்து வழிபாடு செய்யப்பட்டது.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இன்று அதிகாலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது. 32 வகையான வாசனை திரவியங்களால் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இன்று பிற்பகலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதனைக்காண சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. "மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்" என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் முழுவதும் எடுக்கப்பட்டு அபிஷேகங்கள் முடிந்த பிறகு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது. உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு நேற்று மாலை சந்தன காப்பு களையப்பட்டு 32 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை ஆருத்ரா தரிசனமும் சிறப்பாக நடைபெற்றது.
ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. 32 வகையான சிறப்பு அபிஷேகத்தையும் தாண்டவ தீபாராதனையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 18ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெரிய சபாபதி சன்னதியில் தினமும் காலை திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடத்தப்பட்டது. மார்கழி திருவாதிரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
தாமிர சபை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளிய நிலையில், அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் நடன தீபாராதனை நடைபெற்றது. இந்த ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவிலில் வளாகத்தில் கூடியிருந்தனர். தொடர்ந்து அதிகாலையில் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, சுவாமியின் நடன தீபாராதானை காட்சியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஈசன் சொன்னது போல், மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு நன்னாளில், மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரம் ருத்ரனின் அம்சமாகும். திருவாதிரை நட்சத்திரத்தன்று ஈசனின் ஆனந்த நடன தரிசனம் கிடைத்ததால் அது ஆருத்ரா தரிசனம் என்று சொல்லப்படுகிறது.
அதிகாலையில் குளித்து திருநீரு பூசி விரதமிருந்து ஈசனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தால் சகலவித சுகபோகங்களும் கிடைக்கப்பெற்று பிறவிப் பிணி நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே இன்று சிவ ஆலயங்களில் ஏராளமானோர் ஆருத்ரா தரிசனத்தை காண குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications