சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள்.. கையாளுவதில் குளறுபடியா.. நடந்தது என்ன? தேவசம்போர்டு விளக்கம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடிகள் ஏற்பட்டது உண்மைதான் என்று தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பக்தர்களுக்கு தேவசம்போர்டும், அரசும் ஒரு வசதியும் ஏற்படுத்தவில்லை என்ற பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மண்டல பூஜை காலம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. ஆன்லைன் புக்கிங் மட்டுமல்லாது நேரடியாகவும் வந்து பக்தர்கள் முன்பதிவு செய்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல் பார்க்கிங் ஏற்பாட்டில் குளறுபடியால் சுமார் 4 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சந்நிதானம் செல்ல சுமார் 14 மணி நேரம் ஆகிறது. நிலக்கல்லில் இருந்து பம்பாவுக்கு செல்ல பேருந்து கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து பஸ்களும் கூட்டமாகவே இருந்ததால் பக்தர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.
பேருந்துகளில் சீட் பிடிப்பதற்காக குழந்தைகளை ஜன்னல் வழியாக ஏற்றிவிடும் காட்சிகளை நிலக்கல்லில் பார்க்க முடிகிறது. பெற்றோர்களை காணாமல் குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறினர். இது ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. சபரிமலை சந்நிதானத்தில் பக்தர்கள் கூட்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக, நிலக்கல்லில் பக்தர்கள் காக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிலக்கல்லில் குவிந்த பக்தர்களுக்கு தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை என பக்தர்கள் குமுறலுடன் தெரிவித்தனர். குழந்தைகளும் முதியவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். சபரிமலையில் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை செய்வதில் அரசு தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கட்டுக்கடங்காத கூட்டம், அடிப்படை வசதிகள் இல்லாததை அடுத்து அதிக அளவு பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யாமல் பாதியில் வீடு திரும்பி வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பந்தளம் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலுக்குச் சென்று இருமுடியை சமர்ப்பிக்கின்றனர்.
https://twitter.com/chnmharish/status/1734613017898439144
இருமுடியில் உள்ள நெய் அங்குள்ள சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றன. மேலும், உடைத்த நெய்தேங்காய்களை போடுவதற்கு வசதியாக பந்தளம் கோயிலில் யாக குண்டம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சபரிமலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேக்கடியில் இருந்து ஆன்லைன் மூலம் முதல்வர் பினராயி விஜயன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.
தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், தலைமைச் செயலாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய 80,000 பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபரிமலை நடை திறந்த முதல் 19 நாள்கள் சராசரியாக 62,000 பக்தர்கள் தரிசனத்துக்கு வந்ததாகவும், டிசம்பர் 6ஆம் தேதி முதல் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 7ஆம் தேதி ஒரு லட்சத்து இரண்டாயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்ததுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், "கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடிகள் ஏற்பட்டது உண்மைதான். அந்த குளறுபடிகளை உடனுகுடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லா ஆண்டுகளும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான் என்றார்.
சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டும், அரசும் ஒரு வசதியும் ஏற்படுத்தவில்லை என்ற பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானவை. பக்தர்கள் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். கூட்டம் அதிகரிக்கும்போது அனைவருக்கும் அனைத்தையும் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதை வரும் ஆண்டுகளில் எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுகுறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறினார்.
நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்துவதை சுமூகமாக்கும் வகையில் தனியார் ஏஜென்சி ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார். சபரிமலையில் பக்தர்களுக்கு உதவ என்.எஸ்.எஸ், என்.சி.சி தன்னார்வலர்களை பயன்படுத்தலாம் என கேரளா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications