வாஸ்து டிப்ஸ்..சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..வீடு தேடி வறுமை வந்துவிடுமாம்
சென்னை: நாம் உண்ணும் உணவு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும். எனவேதான் சுவையாக சாப்பிடுவதை விட சத்தான உணவாக சாப்பிட வேண்டும். நாம் அமர்ந்து சாப்பிடும் திசையும் கூட நம்முடைய ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது. எனவே நம்முடைய வீட்டில் டைனிங் டேபிளை வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் நாம் எப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
பஞ்ச பூதங்களும் இந்த பூமியை ஆளுகின்றன. நீர், நெருப்பு, ஆகாயம், மண், காற்று ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் ஏற்ற திசைகள் உள்ளன. சரியான திசையில் நாம் சரியான அறைகளை கட்ட வேண்டும். சமையல் அறை, பூஜை அறை, படுக்கை அறை போன்றவைகளும் சரியான திசையில் அமைக்க வேண்டும். அதே போல சாப்பிடும் இடமான டைனிங் அறையும் சரியான இடத்தில் இருக்க வேண்டும். சாப்பிடும் இடம் அமைதியானதாக நிம்மதி தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

சிலரது வீடுகளில் சாப்பிடும் இடத்தில்தான் அதிக சண்டை வரும். சாப்பாடு தட்டு பறக்கும். சிலர் சாப்பிடாமல் கோபித்துக்கொண்டு செல்வார்கள். எனவே நாம் சரியான இடத்தில் அமர்ந்து சரியான திசையை நோக்கி சாப்பிட வேண்டும். டைனிங் டேபிள் போட இடமில்லாவிட்டாலும் சரியான திசையைப் பார்த்து அமர்ந்து சாப்பிட வேண்டும்.
சமையல் அறையை ஒட்டி வீட்டின் மேற்கு திசையில் டைனிங் டேபிள் போடலாம். தென்கிழக்கு திசையில் டேபிள் போட்டு அமர்ந்து சாப்பிடலாம். தென்மேற்கு திசை கன்னி மூலையில் டைனிங் டேபிள் போடக்கூடாது. நாம் உண்ணும் உணவின் மூலம் ஆரோக்கியம் கிடைக்காது. நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. சண்டை சச்சரவும் வரும். சமையல் அறைக்குள் டைனிங் டேபிள் போடாமல் இருப்பது நல்லது.
ஒரு சிலர் டைனிங் டேபிளை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள். கண்டதையும் போட்டு வைத்திருப்பார்கள். டைனிங் டேபிள் அழுக்காக இருக்கும். எப்போதுமே அழுக்குப்பாத்திரங்களை டைனிங் டேபிள் மீது போட்டு வைத்திருக்கக் கூடாது. சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை சுத்தம் செய்யும் சிங்க்கில் எடுத்து போட்டு விட வேண்டும். டைனிங் டேபிளையும் துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும். அப்போதுதான் அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சமையல் அறையும் சாப்பிடும் இடமும் சுத்தமாக இல்லாவிட்டால் வறுமையை வரவேற்பது போலாகிவிடும்.
நாம் சாப்பிடும் மேஜையில் தண்ணீர் பாட்டில் நிரப்பி வைத்ருக்க வேண்டும். இதனால் அன்னபூரணி மகிழ்ச்சியடைவாள். அவரது அருளினால் உணவு பற்றாக்குறை எப்போதும் ஏற்படாது. நாம் சாப்பிடும் தட்டினை ஒருபோதும் கையில் எடுத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. அதே போல ஒருசிலர் உணவு உண்ணும் தட்டினை மடியில் வைத்து சாப்பிடுவார்கள் அதுவும் தவறான செயல்.
சாப்பிடும் திசை முக்கியமானது கிழக்கு திசை நோக்கி சாப்பிடலாம். ஆரோக்கியம் அதிகரிக்கும் ஆயுள் கூடும். அதே போல தெற்கு திசை நோக்கி சாப்பிட்டால் புகழும் செல்வாக்கும் கூடும். மேற்கு திசை நோக்கி சாப்பிட்டால் செல்வம் வளரும். வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. நின்று கொண்டு ஒருபோதும் சாப்பிடக்கூடாது. அதே போல வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக்கூடாது.












Click it and Unblock the Notifications