ஈசான மூலை.. பூஜை அறையில் சாமி படங்களை எந்த திசையில் வைக்கலாம்? ஈசான்ய மூலை அள்ளி தரும் அதிர்ஷ்டம்
சென்னை: ஈசானி மூலை அல்லது ஈசான்ய மூலை என்பது என்ன? அதன் முக்கியத்துவமும், சிறப்புகளும் என்னென்ன? என்பதை சுருக்கமாக பார்ப்போமா?
பொதுவாக, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று 4 திசைகள் உள்ளதுபோல, வடகிழக்கு மூலை, தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை என்று 4 உள்ளன..

முக்கியத்துவம்: இதில், வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் இதனை ஈசான்ய மூலை அல்லது சனி மூலை என்பார்கள்.. அதேபோல, தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் தென்கிழக்கு மூலையாகும்.. இதனை அக்னி மூலை என்பார்கள்.. தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் நைருதி மூலை அல்லது கன்னி மூலை என்பார்கள்.. வடக்கும், மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்கு மூலையாகும். இதற்கு வாயு மூலை என்பார்கள்.
எப்போதுமே நம்முடைய வீடுகளில் திசைகளும் முக்கியம், மூலைகளும் முக்கியம்.. இந்த ஈசான்ய மூலையின் வழியாகவே, குடும்பத்துக்கு தேவையான சகல நன்மையும் கிடைக்கின்றன.. அதனால்தான், இந்த மூலையை சுத்தமாக வைக்கவேண்டும் என்பார்கள்.
வடகிழக்கு மூலை: வீட்டு மனையின் வடகிழக்கு மூலை எனப்படும் ஈசான்ய மூலையில்தான், பூஜை அறை வைப்பார்கள்.. இறைவன் உறையும் இடமே ஈசான்ய மூலை என்பார்கள்.. அதாவது, கிழக்கிலிருந்து சூரியக்கதிர்கள் ஈசான மூலைக்குள் வரும்படி இருக்க வேண்டும்.. இந்த ஈசான்ய மூலையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு நோக்கி வைக்கலாம்.
எப்போதுமே இந்த ஈசான்ய மூலை அடைப்பாக இருக்கக்கூடாது.. சூரிய கதிர்களை போலவே, காற்றோட்டமான வசதியும் தேவை. ஆனால், கனமான பொருட்கள் எதுவும் இங்கு வைக்கக் கூடாது.
குறிப்பாக, அம்மிக்கல், ஆட்டுகல், பழைய பொருட்கள், பீரோ போன்றவை வைக்ககூடாது.. எக்காரணம் கொண்டும், ஈசான்ய பகுதியின் தரையின் மட்டமானது, வீட்டின் மற்ற தரை இடங்களை விட உயரமாக இருந்துவிடக்கூடாது.
செப்டிக் டேங்க்: அதேபோல, கிணறு அமைக்கலாமே தவிர, பாத்ரூம், செப்டிக் டேங்க் போன்றவைகளையும் வைக்கக் கூடாது என்பார்கள். அப்படி அமைந்தால், குடும்பத்திலுள்ளவர்களுக்கு மனநல பாதிப்பு, விவாகரத்து, கருச்சிதைவு இப்படியான தீய சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாம்.
மாடிப்படிகள்கூட இங்கு அமைக்க மாட்டார்கள்.. வேண்டுமானால், பூஜை அறை போலவே, ஈசான்ய மூலையில் படிப்பறை, வரவேற்பறை முதியவர்களுக்கான படுக்கை அறையை அமைக்கலாம்.
பூஜையறை: எப்போதும் ஈசான்ய மூலையில் குடம் நிறைய தண்ணீர் வைப்பது நலம் தரும்.. ஒருவேளை ஈசான்ய மூலையில் பூஜையறை அமைக்க முடியாமல் போனால், வீட்டின் கிழக்கு பக்கத்தில் அதாவது வடகிழக்கு தென்கிழக்கு நடுவில் பூஜை அறை அமைக்கலாம்...
அப்படியும் முடியாதபட்சத்தில், வடக்கு திசை அதாவது வடகிழக்கு வடமேற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் பூஜை அறை அமைக்கலாம். ஆனால், எப்படி பூஜை அறை அமைந்தாலும, மாடம் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டுமாம்.












Click it and Unblock the Notifications