ராமானுஜரின் திருமேனி 1000 ஆண்டுகளாக கெடாமல் இருப்பது எப்படி தெரியுமா? அந்த "தனஞ்செயன்தான்" காரணம்
சென்னை: ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ இராமானுஜரின் திருமேனி மட்டும் 1000 ஆண்டுகள் கடந்தும் கெடாமல் இருக்கிறது? இது எப்படி? திருமேனியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறார்கள்.
இதுகுறித்து குவோரா இணையதளத்தில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் வெளியிட்ட பதிவில் மனித தேகம் பஞ்ச பூதமும், பத்து நாடிகளையும், 10 வாயுக்களையும் கொண்டது. 10 வாயுக்கள் என்பது பிராணன், அபானன், சமானன், உதானன், வியனன், நாகன் , கூர்மன், கருகரன், தேவ தத்தன், தனஞ்செயன் ஆகியவை. உடம்பினுள் ஒவ்வொரு வாய்வும் உயிர் வாழ ஒவ்வொரு வேலையைச் செய்கிறது.

மனித உடலிலிருந்து உயிர் பிரியும் போது தனஞ்செயன் என்ற வாயுவைத் தவிர மற்ற 9 வாயுக்களும் உடனே நவ துவாரங்கள் வழியாக வெளி வந்து விடும். பின் நவ துவாரங்களும் அடைத்து விடும். உயிரோடு இருக்கும் போதே உடல் கெடாமல் பாதுகாத்துக் கொண்டிருப்பது தனஞ்செயன் என்ற வாயுதான்.
உயிர் பிரிந்த பிறகு அந்த தனஞ்செயன் என்ற வாயு மட்டும் 24 மணி நேரம் கழித்துதான் வெளியேறும். உயிர் பிரிந்த உடனேயே நவ துவாரங்களும் அடைத்து விட்ட படியால் அந்த தனஞ்செயன் வெளியேற முயற்சிக்கும் போது வெளியேற வசதியாக உடம்பு ஊதுகிறது. தசை வெடிப்பு ஏற்படுகிறது. பின் உடல் கெட ஆரம்பிக்கிறது.
அதன் பிறகு விஷ அணுக்கள் வெளியே வர ஆரம்பிக்கிறது. அதனால்தான் அக்காலத்தில் இறந்தவர்களின் உடல் இராத் தங்கக் கூடாது என சொல்வார்கள். ஞானிகள், சித்துவைக் கைக் கொண்ட மடாதிபதிகள் போன்றோர் உயிர் பிரிந்த பிறகு எக்காலத்திலும், உயிர் பிரிந்த பிறகும் அந்த தனஞ்செயன் என்ற வாயு அவர்களது திருமேனியை விட்டு வெளியே செல்ல விடாமல், அவர்கள் தவத்தினால் கட்டுப்படுத்தி உள்ளேயே இருக்குமாறு வைத்து விடுவார்கள்.
அதனால் அவர்களின் மேனி எத்தனை ஆண்டானாலும் கெடாமல் அப்படியே இருக்கும். அப்படித்தான் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் திருமேனி ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் கெடாமல் இருக்கிறது. மடாதிபதிகள் முக்தி அடைந்து அந்த கடைசி நிகழ்வுக்கு நாம் போனால் வீட்டிற்கு வந்து குளிக்க வேண்டாம் என சொல்வார்கள்.
ஏனென்றால் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே அந்த தனஞ்செயன் வாயுவை வெளியே வர விடாமல் உள்ளேயே கட்டுப்படுத்தி விட்ட படியால் இறந்த பிறகு அந்த விஷ அணுக்கள் வெளியே வராது. அதனால் குளிக்க வேண்டாம் என கூறுவார்கள். தனஞ்செயன் என்ற வாயுவை கட்டுப்படுத்தி வைக்கும் திறன் கொண்ட மடாதிபதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரின் திருமேனிக்கு கடந்த 1000 ஆண்டுகளில் ஒரு தடவை கூட எந்த ரசாயனப் பூச்சையும் பூசியது கிடையாது. எனினும் அவருடைய மேனி எந்த சேதமும் அடைந்தது கிடையாது. இவ்வாறு ரத்தினம் வடிவேல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications