காமாட்சி விளக்கு.. திரி, எண்ணெய் வகை இதுதானா? காமாட்சி அம்மன் விளக்கில் இது மட்டும் கூடாது
சென்னை: வீடுகளில் காமாட்சி விளக்கினை ஏற்றும்போது, கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இந்த விளக்கேற்றுவதால் வீட்டில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? காமாட்சி விளக்கு வைக்கும் தட்டில் போடப்படும் மங்கல பொருட்கள் என்னென்ன?
பொதுவாக, காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பார்கள்.. யாராக இருந்தாலும், தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றுவார்கள்..

குலதெய்வம்: அவ்வளவு ஏன்? சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது? என்பது தெரியாமல் இருந்தாலும்கூட, அப்படிப்பட்டவர்களும், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, வணங்கியபடி விளக்கேற்றி வழிபடுவார்கள்... அந்த அளவுக்கு காமாட்சி அம்மன் விளக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
திருமணமாகி கணவன் வீட்டிற்கு முதன்முதலில் செல்லும் மணப்பெண்கள், காமாட்சி விளக்கைதான் முதலில் ஏற்றுவார்கள். இதனால் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கையாகும்.
எப்போதுமே வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கேற்றும்போது, வீடு சுத்தமாக இருக்க வேண்டும்.. விளக்கும் சுத்தமாக இருக்க வேண்டும். விளக்கை தரையில் வைத்து ஏற்றக்கூடாது. தரையில் கோலமிட்டு, கோலத்தின் மீது ஏதாவது தட்டை வைத்து, அந்த தட்டில் சிறிது பச்சரிசி கொட்டி, அதன் மீதுதான் விளக்கை வைக்க வேண்டும்.
48 நாட்கள்: விளக்கின் இருபுறமுள்ள யானைகளுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடவேண்டும். கடன் பிரச்சனையில் உள்ளவர்கள், காலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி, தொடர்ந்து 48 நாட்களுக்கு வேண்டிக் கொண்டு வரவேண்டும்.
இந்த காமாட்சி விளக்கிலுள்ள திரிகளை பற்றியும் சில முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதேபோல காமாட்சி விளக்கு மட்டுமல்லாமல், அந்த விளக்கு வைக்கும் தட்டில் சில மங்கல பொருட்களை சேர்க்கும்போது, கூடுதல் சிறப்பு என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
காமாட்சி விளக்கு: குறிப்பாக, காமாட்சி விளக்குக்கு, நெய் ஊற்றி, தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றினால் சிறப்பு.. 1 ரூபாய் நாணயமோ அல்லது 5 ரூபாய் நாணயமோ போட்டு, அதற்கு பிறகு திரி போட்டு தீபம் ஏற்றினால் அதைவிட சிறப்பு அல்லது நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய்யிலும் விளக்கேற்றலாம்.
அல்லது நல்லெண்ணெயில் சிறிது நெய் கலந்தும் ஏற்றலாம்... விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகே திரி போட வேண்டும். ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் இவைகளை தூளாக்கி, சிறிது எண்ணெயில் கலந்து ஏற்றலாம்.
ஆனால் அதிக சுடர்கள் வராதவாறு பார்த்து கொள்ளவேண்டும். காரணம் இதிலிருந்து வெளிவரும் சுடர், விளக்குகளில் உள்ள மங்கல பொருட்களில் பட்டுவிடக்கூடாது. அதே போல் நாம் ஏற்றும் தீபத்தின் சுடரானது, தெய்வத்தின் மீது பட்டு மறைக்க கூடாது... தெய்வத்திற்கு முன்பாக சுடர் ஒளிவிடும்படி இருக்க வேண்டும்..
தாம்பாளம்: அதேபோல, தாம்பாளத்திலும், தண்ணீர் அல்லது மலர்கள் தூவி அதன்மீது விளக்கை வைக்கலாம். இந்த விளக்கை வைக்கும் தட்டில், சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள் குங்குமம் கலக்க வேண்டும். இதில், ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அப்போது 1 ரூபாய் நாணயத்தின் சிங்க முகம், மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்.
விளக்கை வைத்துள்ள தட்டிலும் பூக்களை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.. இதற்கு பிறகே வழிபாடு நடத்த வேண்டும். ஆனால், வழிபாடு முடிந்ததும், தட்டிலுள்ள, தண்ணீர், மஞ்சள், குங்குமத்தை தினமும் மாற்ற வேண்டும்.. தினமும் முடியாவிட்டால் வெள்ளி அல்லது செவ்வாயில் மாற்ற வேண்டும்.
அகல் விளக்கு: அதேபோல, விளக்கை ஏற்றும்போது நேரடியாக தீப்பெட்டியில் ஏற்றாமல், ஊதுபத்தியை பற்ற வைத்து, அதிலிருந்து விளக்கில் சுடரை பற்ற வைக்கலாம். அல்லது ஒரு அகல் விளக்கை ஏற்றி அதன் மூலம் விளக்கை பற்ற வைக்கலாம். காரணம், தீப்பெட்டியை நல்லதிற்கும் ஏற்றுவார்கள், கெட்டதுக்கும் ஏற்றுவார்கள் என்பதால், நேரடியாக தீப்பெட்டி வைத்து விளக்கு ஏற்றுவதை தவிர்க்கலாம். இப்படி செய்தால், நம்முடைய வீட்டிலுள்ள கெட்ட அதிர்வலைகள் வெளியேறும் என்பது ஐதீகமாகும்.
எப்போதுமே காமாட்சி விளக்கு ஏற்றும் நேரம் பிரம்ம முகூர்த்தத்துக்குள் இருக்க வேண்டும் என்பார்கள்.. அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு காலை 6 மணிக்கு முன்பே, உங்களுடைய வீட்டில் நிறைவு செய்திருக்க வேண்டும்... இப்படி தினமும் ஏற்றி வருவதால், கடன் பிரச்சனை என்று மட்டுமல்ல, உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும், 48 நாட்களுக்குள் நிச்சயமாக நிறைவேறி இருக்கும்.. வீட்டில் இருக்கும் கன்னிபெண்கள் இந்த வழிபாடு செய்தால் மணம் போல் மாங்கல்யம் கூடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.












Click it and Unblock the Notifications