ராகு காலம் கேள்விப்பட்டிருக்கோம்! கேது காலம் என்று ஏன் இல்லை? சுவாரஸ்ய தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு காலம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், அது ஏன் கேது காலம் என்ற ஒன்று இல்லாமல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எமகண்டம் என்றால் என்ன என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் எழுதியதாவது: ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை? ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது.

spirtuality

அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம். நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். #மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமை கள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!

#நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசை யில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.

சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.
மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும்.

#அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.
#ஒரு_ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார்கள்கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம்.

ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று பல ஸ்தலங்கள் உண்டு. கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு. ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளி யையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.

புராணத்தில் ராகு- கேது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.
திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள்.

மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்பதாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

#அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது.

அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. #அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.

பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.

#அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டுமென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களையும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார்.

தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான்.

#இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.

#யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான்.

அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம். இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.

#இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.

#இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும்.

#உதாரணமாக, ராகு மீனத்தில் நின்றிருப்பின் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்துடனாவது சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன்களையே வழங்குமென்று கூற வேண்டும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அனுபவத்தில் இதுவும் ஓரளவுக்கு உண்மையென்றே தோன்றுகிறது. சனி வழங்கக்கூடிய பலன்களை ராகுவும் செவ்வாய் வழங்க வேண்டிய பலன்களைக் கேதுவும் ஜாதகருக்கு அளிக்கின்றன. இது அனுபவ உண்மை.

ராகு- மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் வலுப்பெறுகிறது என்று சில நூல்கள் கூறுகின்றன. கேதுவுக்கென பிரத்யேகமாகக் கூறப்படவில்லை.

இந்த இரு கோள்களுக்கும் இடையே ஆறு ராசிகள் அல்லது 180 பாகை வித்தியாசம் இருப்பதால், ராகுவுக்குக் கூறப்பட்ட ராசிகளுக்கு நேர் எதிர் ராசிகளாகிய துலாம், விருச்சிகம் ஆகியவற்றிலும் மற்றும் கூறப்படாத ராசிகளிலும் கேதுவுக்கு வலு அதிகம் என்று கொள்ளலாம்.
அவ்வாறே மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.

ஜோதிடத்தில் ராகு- கேது தன்மை
கிரகத்தன்மை ராகு கேது
1. நிறம் கருப்பு சிவப்பு
. குணம் குரூரம் குரூரம்
3. மலர் மந்தாரை செவ்வல்லி
4. ரத்தினம் கோமேதகம் வைடூரியம்
5. சமித்து அறுகு தர்ப்பை
6. தேசம் பர்ப்பரா தேசம் அந்தர்வேதி
7. தேவதை பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,
சித்திரகுப்தன், விநாயகர்
8. ப்ரத்தியதி தேவதை ஸர்பம் நான்முகன்
9. திசை தென்மேற்கு வடமேற்கு
10. வடிவம் முச்சில் (முறம்) கொடி வடிவம்
11. வாகனம் ஆடு சிங்கம்
12. தானியம் உளுந்து கொள்ளு
13. உலோகம் கருங்கல் துருக்கல்
14. காலம் ராகுகாலம் எமகண்டம்
15. கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை
16. பிணி பித்தம் பித்தம்
17. சுவை புளிப்பு புளிப்பு
18. நட்பு கிரகங்கள் சனி, சுக்கிரன் சனி, சுக்கிரன்
19. பகை கிரகங்கள் சூரியன், சந்திரன், சூரியன், சந்திரன்,
செவ்வாய் செவ்வாய்
20. சம கிரகங்கள் புதன், குரு புதன், குரு
21 காரகம் பிதாமகன் (பாட்டனார்) மாதாமகி(பாட்டி)
22. தேக உறுப்பு முழங்கால் உள்ளங்கால்
23. நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, அசுவதி, மகம், மூலம்
சதயம்
24. தசை வருடம் 18 ஆண்டுகள் 7 ஆண்டுகள்
25. மனைவி சிம்ஹிகை சித்ரலேகா
26. உப கிரகம் வியதீபாதன் தூமகேது
27. உருவம்
அசுரத்தலை, ஐந்து பாம்புத் தலை. இவ்வாறு ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+