வீட்டில் விளக்கேற்றிய பின் மறந்தும் இந்த தவறு செய்யாதீர்கள்.. ஆன்மீக டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீட்டில் விளக்கேற்றிய பிறகு நாம் சில விசயங்களை செய்யக்கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்க வேண்டும் என்றால் நாம் சில விசயங்களை செய்ய வேண்டும். இந்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களை பார்க்கலாம்.
நாம் உறங்கி எழும் நேரம் பிரம்ம முகூர்த்தமாக இருக்க வேண்டும். சிலர் சூரியன் உதித்து சில மணி நேரம் கழித்துதான் எழுவார்கள். ஆனால் காலை 6 மணிக்குள் கண் விழிப்பது சிறப்பு. ஏனெனில் அதிகாலை நேரத்தில்தான் பித்ருகளும், தேவர்களும் நம் வீடு தேடி வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நாம் காலை எழுந்து முகம் கழுவிவிட்டு முதலில் வீட்டின் பின்பக்க கதவை திறக்க வேண்டும். முன் பக்க கதவை திறக்கும் போது மகாலட்சுமி வருக என்று சொல்ல வேண்டும்.

வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். கிராமத்தில் இது சாத்தியம் என்றாலும் நகரங்களில் வாசலை சுத்தம் செய்து கோலம் போடலாம். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது செய்யக்கூடாது. அடுப்பில் வைத்த பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெறும் நெற்றி பாழ் என்று சொல்வார்கள். எனவே பெண்கள் குளித்து விட்டு நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும். நாம் முதலில் குங்குமம் வைத்துக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
நாம் பூஜைக்காக விளக்கேற்றும் போது தேவர்களும், தெய்வங்களும் மகிழ்ச்சி அடைவதாக ஐதீகம். எனவே, விளக்கு ஏற்றும் போது நாம் எந்த தவறையும் செய்யக்கூடாது. விளக்கு ஏற்ற சரியான நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரை. மாலை 5 மணி முதல் 7 மணி வரை விளக்கி ஏற்றினால் நல்ல பலனை கொடுக்கும்.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.
வீட்டில் விளக்கேற்றிய பிறகு பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்கவோ, கடன்கொடுக்கவோ கூடாது. விளக்கு வைத்த பிறகு தலை சீவக்கூடாது. தலைவாசல் படியில் அமர்ந்து பேன் பார்க்கக் கூடாது. விளக்கேற்றிய பின்னர் குளிக்கக்கூடாது. விளக்கு ஏற்றி வைத்த பிறகு வீடு கூட்டி குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது. இரண்டு கைகளால் தலையை சொறியக்கூடாது. அமாவாசை நாட்களில் நாம் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். அன்றைய தினம் நாம் கோலப்போடக்கூடாது.
விளக்கு ஏற்றும்போது தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை செய்து விடுகிறோம். அந்தத் தவறுகளின் பலனாக வழிபாட்டின் பலனை முழுமையாகப் பெற முடியாது. மேற்கூறிய விதிகளின்படி தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட்ட பலன் கிடைக்கும். பூஜை செய்யும் போது எல்லா விஷயத்தையும் கவனமாக கடைபிடிக்கவும்.












Click it and Unblock the Notifications