Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துர்காஷ்டமி.. துக்கங்களை நீக்கும் துர்கா.. எதிரிகள் தொல்லை நீங்க இப்படி வழிபடுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துர்காஷ்டமி நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. துர்க்கையை இந்த நாளில் வழிபட்டால் எதிரிகள், நோய், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. துர்காஷ்டமி தினம் பத்ரகாளி அவதார தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. துர்க்காஷ்டமி, மஹாநவமி, விஜயதசமி என்று இந்த நாட்கள் போற்றப்படுகின்றன.

Durga Ashtami: Worship Durga like this to get rid of your enemies

சிறையில் இருந்த வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் அவதரித்த அதே நேரத்தில் நந்தகோபனின் மனைவி யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இறைவனின் ஆணைப்படி வசுதேவர் யாருக்கும் தெரியாமல் இந்த இரு குழந்தைகளையும் இடம் மாற்றி வைத்து விடுகிறார்.

குழந்தை பிறந்த செய்தியறிந்த கம்சன் சிறைக்கு வந்து வசுதேவரால் இடம் மாற்றி வைக்கப்பட்ட பெண் குழந்தையை வீசியெறிந்து கொல்ல முயற்சிக்கும்போது அவன் கையில் இருந்த குழந்தை உயரே பறந்து துர்க்கையாக காட்சியளித்தாள். கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமியில்தான் துர்கையும் அவதரித்திருக்கிறாள் என்பது புராண கதைகளின் மூலம் தெரியவருகிறது.

துர்கை பிறந்தது அஷ்டமி திதியில் என்பதால் அம்பிகைக்கு மிகவும் உகந்த நவராத்திரியில் வருகின்ற அஷ்டமி நாள் துர்க்காஷ்டமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மகிஷாசுரனோடு யுத்தம் நடந்த காலத்தில் இந்த துர்க்காஷ்டமி நாளன்று, சண்ட-முண்டர்களையும், ரக்தபீஜன் எனும் அரக்கனையும் அடியோடு நாசம் செய்வதற்காக துர்காதேவியின் நெற்றியிலிருந்து காளிதேவி தோன்றியதாகக் கூறுவார்கள்.

துர்க்காஷ்டமி என்றும் மஹாஷ்டமி என்றும் வீராஷ்டமி என்றும் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகின்ற நவராத்திரியின் எட்டாம் நாள் அபரிமிதமான சக்தியைப் பெற்ற நாள் என்பது அனுபவ பூர்வமாக பலரும் அறிந்த உண்மை. கொல்கத்தா போன்ற நகரங்களில் துர்க்காஷ்டமி நாளன்று மிக விசேஷமாக காளி பூஜை செய்யப்படுகிறது.

வராஹ புராணத்தில், அஞ்ஞான ரூபமான மஹிஷன் என்ற அசுரன் அம்பிகை எனும் ஞானத்தினால் அழிக்கப்படுவதால் துர்க்காதேவி ஞானசக்தி என்று போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்காஷ்டமி நாளில் துர்காதேவியின் 64 யோகினிகளும், பிராம்மி, மாஹேஸ்வரி,மஹாலக்ஷ்மி வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்த்ராணி, சாமுண்டா ஆகிய அஷ்ட சக்திகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக அம்பிகையின் உபாஸகர்கள் கூறுகிறார்கள்.

துர்காதேவியின் மற்ற வடிவங்களான சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காலராத்ரீ, மஹாகௌரி, சித்திதாத்ரி ஆகிய நவதுர்க்கைகளும் ஒன்றாக இணைந்து துர்க்காஷ்டமி நாளன்று நமக்கு அருள்புரிவதாக ஐதீகம். இதில் சித்திதாத்ரி தேவி அஷ்டமாசித்திகள் எனப்படும் அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகம்யா, ஈஸித்வம் வஷித்வா ஆகியவற்றை தன்னிடத்தே கொண்டவள்.

சிவபெருமான் மஹாசக்தியைப் பிரார்த்தித்து இந்த அஷ்டமாசித்திகளை அடைந்ததாக தேவிபுராணம் கூறுகிறது. மஹிஷாசுரமர்த்தினி, துர்க்கமன் என்ற அசுரனை அழித்ததால் துர்க்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

சர்வ துக்கங்களையும் போக்கிடும் இந்த துர்க்கா தேவியானவள், அவளது உபாஸகர்களால் சூலினி துர்க்கா, வனதுர்க்கா, சாந்தி துர்கா, ஜாதவேதோ துர்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரீ துர்க்கா என்று விதவிதமான மந்திரங்களால் பலவிதமாகப் போற்றப்படுகிறாள்.

துர்கா பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன், புத்திர பௌத்திர விருத்தியையும், சுபிட்சத்தையும், தன விருத்தியையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான். சர்ப்பங்கள், ராட்சர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவையாவும் துர்க்கா பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே ஓடிவிடும் என்பது ஐதீகம்.

துர்க்காஷ்டமி, பத்ரகாளி அவதார தினத்தில் காளியை பூஜிப்பவர்கள் உபாசிப்பவர்கள் தசா மகாவித்யா என்னும் பத்து வித அம்மனின் வடிவங்களையும் பூஜித்த பலனைப் பெறுவார்கள். காளிதாஸர், கவிச் சக்ரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், வீர சிவாஜி, தெனாலிராமன் போன்ற பலரும் காளியின் அருள்பெற்றவர்களே. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு காளி தேவி காட்சி அளித்திருக்கிறார். காளிதேவியை மனதிற்குள்ளாக வைத்து வழிபடுவதால் அச்சங்கள் நீங்கும் தைரியம் அதிகரிக்கும்.

எதிரி, நோய், கடன், தொல்லைகள் நீங்கவும் சித்தப் பிரமை, பில்லி, சூனியம், ஏவல், பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாகதோஷம், புத்திர தோஷம் இன்ன பிற குறைகளாலும் அவதிப்படுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் வருகின்ற சர்வசக்தி படைத்த இந்த துர்க்காஷ்டமி நாளன்று விரதம் இருந்து தங்கள் சக்திக்கு இயன்ற அளவில் துர்கைக்கு பூஜை செய்து வழிபட சர்வ தோஷங்களும் விலகி வாழ்வினில் வளம் பெறுவார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+