தோசைக்கு அரைக்கறீங்களா? சிங்கப்பெருமாள் கோயில் மாதிரியே.. மதுரை அழகர் கோவில் தோசை பிரசாதம்.. சூப்பர்
சென்னை: கோயில்களில் வழங்கப்படும் பிரசித்தி பெற்ற தோசைகள் என்னென்ன தெரியுமா? இதில், அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தோசைக்கு ஏன் அவ்வளவு மவுசு? இதை நாமும் வீட்டிலேயே தயாரிக்கலாமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக தோசை விளங்கி கொண்டிருக்கிறது.. இந்த தோசை, பாரம்பரியமான கோயில்களில் பிரபலமான உணவாகவும் திகழ்ந்திருக்கிறது.

அதாவது, கடவுளுக்கு முன்பெல்லாம் "அப்பம்" தான் படைக்கப்பட்டிருக்கிறது. இந்த அப்பம்தான் நாளடைவில் தோசையாக மாறிவிட்டதாக கல்வெட்டுகளில் பதிவாகியிருக்கின்றன.
காஞ்சிபுரம்: நம்முடைய காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கல்வெட்டுகளில்கூட இதை பற்றி பொறிக்கப்பட்டுள்ளது.. கடவுளுக்கு படைக்கப்பட்ட தோசை மாவில், சீரகம், மிளகு கலந்து காரமாக தோசை தயாரித்து படைத்தார்களாம்.
அவ்வளவு ஏன்?திருப்பதி வெங்கடாசலபதி கோயில் பெருமாளுக்கு அன்றைய காலங்களில் படைக்கப்பட்டது தோசைதானாம்.. அந்த தோசையின் மீது சர்க்கரை தூவி படைப்பார்களாம். இதற்கு பிறகுதான் "லட்டு" மாற்றப்பட்டுள்ளது. நம்முடைய தமிழகத்தில் ஏராளமான கோயில்களில் தோசையே படைக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு: இதில் செங்கல்பட்டு அடுத்துள்ள சிங்கப் பெருமாள்கோவிலில், வழங்கப்பட்டு வரும் தோசையும் பிரசித்தி பெற்றதுதான். இந்த ஊரின் பெயர் நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் வழங்கப்படுகிறது.
2000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தை சேர்ந்த குடைவரைக் கோயில் இதுவாகும்.. இந்த சிங்கப்பெருமாள் நரசிம்மர் கோவிலில், லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றைவை பிரசாதமாக தரப்படுகிறது என்றாலும், மிளகு தோசைதான் பக்தர்களின் வரவேற்பை அதிகமாக பெற்றுள்ளது.. இந்த தோசைகளை பித்தளை பானைகளில் வைத்திருப்பார்கள்.
தனிப்பிரியம்: பக்தர்களுக்கு தரும்போது, இந்த தோசையில் எண்ணெய், பொடி கலந்து தருகிறார்கள். குழந்தைகளுக்கும் இந்த தோசை மீது தனிப்பிரியம் ஏற்பட்டுவிடும்.. அதனால்தான் இதற்கு தோசைப் பெருமாள் கோயில் என்று பெயரே வந்ததாம்.
அதேபோல, அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தோசை என்றால், பக்தர்களிடம் பிரசித்தி பெற்ற உணவாகும்.. அழகர்கோயிலுக்கு வருபவர்கள் தோசை வாங்காமல் செல்ல மாட்டார்கள்.. காரணம், இந்த தோசை பிரசாதம் வேறு பெருமாள் கோவில்களில் கிடைக்காது.
வீட்டில் தயாரிக்கலாம்: சுத்தமான அரிசி, உளுந்து, மிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து இந்த தோசை தயாராகிறது.. 2 கிலோ அரிசிக்கு, 6 கிலோ நெய் பயன்படுத்துகிறார்களாம்.. 180 கிராம் எடை உள்ள தோசை 30 ரூபாய் என்கிறார்கள்.. இதை வீட்டில் நாமும் தயாரிக்கலாம்.. இதற்கு புழுங்கலரிசி - அரை கப், பச்சரிசி - 2 கப், இரண்டையும் சுத்தமாக கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும். இதன் தண்ணீரை முற்றிலும் வடித்துவிட்டு, ஆறவைத்து மாவாக அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு 1 கப் கருப்பு உளுந்தினை, லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாகவும், கொரகொரப்பாகவும் அரைக்க வேண்டும். இதில், கால் ஸ்பூன் சீரகம், மிளகு இரண்டையும் சேர்த்து கொள்ளலாம்,.
சுவையா தோசை: இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த அரிசி மாவு, உளுந்து மாவு இரண்டையும் சேர்த்து, சீரகம், மிளகு, உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையை, கால் டம்ளர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைய வேண்டும். இதனை 4 மணி நேரம் புளிக்கவிட வேண்டும். 4 மணி நேரம் கழித்து, சிறிது பெருங்காயம் கலந்து, ஊத்தம்போல ஊற்ற சற்று கனமாக ஊற்ற வேண்டும். இதில், 1 ஸ்பூன் நெய் விட்டு சுட்டு எடுத்தால், அழகர் கோவில் நெய் தோசை தயார். இது ருசியுடனும் இருப்பதுடன், ஆரோக்கியமானதும்கூட.












Click it and Unblock the Notifications