முருக பக்தர்களுக்கு குட்நியூஸ்.. மார்கழியில் பழனி மலைக்கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு
பழனி: மார்கழி மாதம் முழுவதும் பழனி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17 முதல் ஜனவரி 15ஆம் தேதி வரைக்கும் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
மார்கழி மாதம் மகத்துவமான மாதம். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும், சிவ ஆலயங்களில் திருவெம்பாவையும் ஒலிக்கும். முருகன், ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு வருகை தருவார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களான திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை தனுர் எனப்படும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். திருக்கோயிலின் உபகோயிலான பழநி ரதவீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரத்தில் உள்ள அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் டிசம்பர் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு நடைபெறும்.
பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 27ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நடைபெறும். ஜனவரி 15ம் தேதி தனுர் மாத பூஜை பூர்த்தி நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications