இன்று ஆடி அமாவாசை! ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.. அக்னி தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம்
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். நேற்றைய தினம் ஆடிப்பூரம் கொண்டாடப்பட்ட நிகழ்வில் இன்று ஆடி அமாவாசையையொட்டி காவிரி நதி படுகைகளிலும் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களில் காசி என்றால் தமிழகத்தில் ராமேஸ்வரம்தான். முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள் இந்த இரு புண்ணிய நகரங்களிலும் கொடுத்தால் நல்லது என்கிறார்கள்.

வடமாநிலத்தவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் திதி கொடுத்துவிட்டு பிறகு காசியில் திதி கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அது போல் தென் மாநிலத்தவர்கள் முதலில் காசியில் திதி கொடுத்துவிட்டு பிறகு ராமேஸ்வரத்தில் கொடுக்க வேண்டுமாம்.
இந்த ஐதீகத்தை பலர் பின்பற்றி வருகிறார்கள். மாதந்தோறும் வரும் அமாவாசைகளும் முக்கியம் என்றாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகியவை முக்கியமானது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தண்ணீரும் ஆகாரமும் வைத்தால் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள். குடும்பமும் சுபிக்சம் ஆகும்.
அந்த வகையில் இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருக்கிறது. அதிகாலை முதலே கடற்கரைகளிலும் திதி கொடுக்கும் வேத விற்பன்னர்களின் அலுவலகங்களிலும் வீடுகளிலும் மக்கள் குவிந்து வருகிறார்கள்.
22 தீர்த்தங்களில் குளித்துவிட்டு ராமேஸ்வரத்தில் திதி கொடுத்துவிட்டு ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இதனால் கோவில் வளாகம், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. அது போல் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
பக்தர்கள் கூடும் இடங்களையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 7ஆம் நாளான இன்று ஆடி அமாவாசையையொட்டி காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள உள்ளார்.
அது போல் காவிரி ஆற்றின் படுகைகளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications