தீபாவளி! இன்று கேதார கவுரி விரதம்! நோன்பு எடுக்க உகந்த நேரம் என்ன? எல்லாமே 21 ரெடியா?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று கடைப்பிடிக்கப்படும் கேதார கவுரி விரதத்தில் நோன்பு எடுக்க உகந்த நேரம் எது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். நோன்பை எப்படி எடுக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
கேதார கவுரி விரதம் 21 நாட்கள் அனுசரிக்க வேண்டிய விரதமாகும். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் அமாவாசை வரைக்கும் இந்த விரதம் தொடரும். தினமும் காலை எழுந்து குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

பின்னர் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு முடிச்சுகளால் கலசத்தை சுற்றி அமைப்பர். இந்த கலசமே சிவன் பார்வதியாக வழிபடப்படுகிறது. இந்த விரதம் இருப்பவர்கள் தினமும் வெற்றிலை பாக்கு, பழம் தேங்காய் வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
21 ஆம் நாள் அன்று 21 அதிரசம் , 21 வாழைப்பழம், 21 விரலி மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்றிகள் கொண்டு உணவு சமைத்து விரதத்தை முடிப்பர். பெண்களுக்கு மிகச் சிறப்பான விரதமாகும். இந்த பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும்.
அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது. ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம், பட்டு வஸ்திரம் வைத்து பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்ற வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சனை செய்ய வேண்டும்.
அத்துடன் இறைவனின் 16 நாமகங்களைச் சொல்லி தூப, தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து பலவித அலங்காரங்களை செய்து வில்வம், தும்பை போன்ற இலைகளையும் பூக்களையும் வைத்து சிவ நாமங்களை சொல்லி பூஜிக்க வேண்டும். பிறகு நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் வலது கைகளிலும் பெண்கள் இடது கைகளிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இந்த விரதம் 21 நாட்களுக்கு அனுசரிக்க வேண்டியதாக இருந்தாலும் உடல்நிலை, சூழ்நிலையை பொருத்து குறைந்த நாட்கள் விரதம் இருக்கலாம். அந்த வகையில் தற்போது ஒரு நாள் மட்டுமே இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
அதாவது தீபாவளி பண்டிகையில் வரும் அமாவாசையில் விரதத்தை மேற்கொள்கிறார்கள். இந்த முறை தீபாவளி பண்டிகை அன்றே அமாவாசை திதி பிறந்தது. அதாவது நேற்று மாலை 4.29 மணிக்கு அமாவாசை திதி தொடங்கியது. இன்று மாலை 6.25 மணிக்கு திதி முடிகிறது.
நோன்பு எடுக்கும் நேரம்: சதுர்த்தி திதியன்றே அமாவாசை வருவதால் நேற்றைய தினமே நோன்பை கடை பிடித்து அடுத்த நாள் நவம்பர் 1 ஆம் தேதி அதாவது இன்று காலை 8.30 மணி முதல் 10.20 மணிக்குள்ளாக நோன்பு கயிறை கட்டிக் கொள்ளலாம்.
ஒரு சிலர் சதுர்த்தி அமாவாசையை கணக்கிடாமல் வெறும் அமாவாசையை மட்டும் கணக்கிட்டு நோன்பு எடுப்பர். அவர்கள் இன்று காலை 9.15 மணி முதல் 10.20 மணி வரை நோன்பு எடுக்கலாம்.












Click it and Unblock the Notifications