வரவேற்பரை வாஸ்து... போர்க்கள காட்சிகள்.. மறந்தும் கூட உங்க வீட்டு ரிசப்சனில் இந்த தவறு செய்யாதீர்கள்
சென்னை: உறவுகள் கூடி மகிழும் அறை வரவேற்பு அறை. விருந்தினர்களை வரவேற்கவும் குடும்பத்தினர் கூடி ஆலோசனை செய்யவும் பயன்படுத்தும் அறை வரவேற்பு அறை. நம்முடைய வீடு அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருப்பதில் வரவேற்பரை முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு போர்க்களமாக மாறாமல் இருக்க வாஸ்துபடி வரவேற்பரையில் என்ன வைக்கலாம் என்ன வைக்கக்கூடாது என்று பார்க்கலாம்.
வீட்டில் வரவேற்பு அறை கிழக்கு பக்கமாகவோ, வடக்கு பக்கமாகவோ இருப்பது நல்லது. பொதுவாக வரவேற்பு அறை சதுரமாக அமைக்க வேண்டும். கான்கிரீட் உத்திரம், மரத்தால் ஆன உத்திரம் இருந்தால் அதை மறைக்க சீலிங் அமைக்க வேண்டும்.

வரவேற்பு அறையில் சோபா நாற்காலிகளை அதிகமாக குவித்து வைக்கக்கூடாது. வடக்கு கிழக்கு முகமாக பார்த்து அமரும் வகையில் நாற்காலிகள் சோபாவை போட வேண்டும். தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டி சோபா நாற்காலிகளை போட வேண்டும். உதிரம் வரும் இடத்திலோ, பிரம்மஸ்தானம் வரும் இடத்திலோ சோபா, மேஜை நாற்காலிகளை போடக்கூடாது.
வரவேற்பு அறைக்குள் சூரிய வெளிச்சம் படும் வகையில் ஜன்னல் அமைக்க வேண்டும். வரவேற்பு அறையில் எப்போது இயற்கை காட்சிகள் அடங்கிய வால் பேப்பர்களை ஒட்டலாம். ஷோகோஸ் வைத்து அதில் அழகிய பொம்மைகள், மர சிற்பங்கள் வைக்கலாம். தொலைக்காட்சி, ரேடியோ, டிவிடி போன்றவைகளை வைப்பதற்கு சரியான இடம் ஒதுக்க வேண்டும்.
பொதுவாக தொலைக்காட்சி பெட்டிகளை தென்கிழக்கு மூலையில் வைப்பது சிறப்பானது. தென்மேற்கு பகுதியில் எலட்க்ரானிக்ஸ் பொருட்களை வைப்பதால் அடிக்கடி பழுதாகி வீண் செலவை ஏற்படுத்தி விடும். வடமேற்கு பகுதியில் வைப்பதால் எந்த நன்மையும் இல்லை.
தெய்வப்படங்களை வரவேற்பரையில் பிரம்மாண்டமாக பெரிதாக வைக்கலாம். மதுரை மீனாட்சி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படங்களை வரவேற்பரையில் வைப்பது செல்வ வளத்தை தரும். வலம்புரி சங்கு மகாலட்சுமியின் அம்சம். அதனை வரவேற்பு அறையில் சிறியதும் பெரியதுமாக மாட்டி வைக்க வேண்டும்.
பொதுவாகவே வரவேற்பு அறையில் கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வண்ணங்களை மட்டுமே பூச வேண்டும். அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட வால்பேப்பர் ஒட்டலாம். அதே நேரத்தில் சீலிங் எப்போதும் வெள்ளை நிற வண்ணத்தில் இருப்பதுதான் சிறப்பு. அழகிய விளக்குகள், சாண்டிலியர் போன்ற விளக்குகளை வரவேற்பு அறையில் பொருத்தலாம்.
கொடிய விலங்குகள், போர்கள காட்சிகள் கொண்ட படங்களை ஒருபோதும் வரவேற்பு அறையில் மாட்டி வைக்கக்கூடாது. அது வீட்டையே போர்க்களமாக மாற்றிவிடும் ஜாக்கிரதை. நம்முடைய வீடு அனந்தமாகவும் அமைதியாகவும் இருக்க வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள இந்த விசயங்களை பின்பற்றினால் போதும் உங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைதான்.












Click it and Unblock the Notifications