காளிங்க நர்த்தனடி! சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா! திருப்பதியில் உண்டியல் வருமானம் என்ன?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பின. அதையும் தாண்டி வகுலமாதா கெஸ்ட் அவுஸ் வரை வரிசை நின்றிருந்தது.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள். மேலும் நேற்று முதல் பிரம்மோற்சவம் தொடங்கியது. இது 9 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் திருப்பதி பெருமாளை தரிசிக்க 3 மாதங்களுக்கு முன்பு ரூ 300 டிக்கெட்டை புக் செய்வது முக்கியம். இதுதான் தற்போதைய நடைமுறை. இந்த புரட்டாசி மாதம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி எத்தனை பேர் பெருமாளை தரிசித்தனர் என்பதை பார்க்கலாம். நேற்று ஒரு நாளில் 81,481 பேர் பெருமாளை தரிசனம் செய்தனர். 38,762 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ3.31 கோடி கிடைத்துள்ளது. அது போல் டைம் ஸ்லாட் மூலம் சர்வ தரிசன டிக்கெட் வாங்காமல் கூண்டில் அடைப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ஆனது. வகுலமாதா பயணியர் தங்கும் விடுதி வரை வரிசை நீண்டிருந்தது. இந்த தகவல்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருந்தது.
இதுவரை பிரம்மோற்சவத்தில் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்னவாகனம், கற்ப விருக்ஷ வாகனம் உள்ளிட்டவைகளில் மலையப்ப சுவாமி உலா வந்தார். அந்த வகையில் நேற்று மாலை சர்வ பூபால வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடந்தது. சர்வ பூபால் வாகனத்தில் பெருமாள், கிருஷ்ணராக வந்து கொடிய விஷம் கொண்ட காளிங்கன் எனும் பாம்பை கொன்றார்.
காளிங்கன் யமுனை நதியில் தன் விஷத்தை கக்கி அந்த ஆற்றை விஷமாக்கியது. இதனால் அந்த நதியில் தண்ணீர் குடிக்க சென்ற சிறுவர், சிறுமியர் அவ்வப்போது இறந்து வந்தனர். இந்த நிலையில் பந்து விளையாடிய கிருஷ்ணர் யமுனையில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற போது காளிங்கனுடன் சண்டையிட்டு அதன் தலை மேல் ஏறி நடனமாடியதாக ஒரு ஐதீகம் உள்ளது.












Click it and Unblock the Notifications