வீடு தேடி வரும் முன்னோர்கள்! 15 நாட்களுக்கு நம்முடன் தங்கும் மகாளய பட்சம் காலம்! என்னென்ன செய்யலாம்?
சென்னை: மகாளய பட்சம் எனப்படும் முன்னோர்களுக்கான விரத தினம் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இது வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நீடிக்கிறது. அன்றைய தினம் மகாளய அமாவாசையுடன் மகாளய பட்சம் முடிவடைகிறது. இந்த இடைப்பட்ட 15 நாட்களில் என்னென்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சத்தின் 15 நாட்களும் நமது முன்னோர்கள் நம்முடன் பூமியில் தங்கியிருப்பார்கள். அதாவது இந்த 15 நாட்களும் அவரவர் வீடுகளில் தங்கிக் கொள்ள எமதர்மராஜன் விடுமுறை அளிப்பார் என சொல்லப்படுகிறது. அமாவாசை அன்று மீண்டும் முன்னோர்கள் விண்ணுலகத்திற்கே சென்றடைவார்கள் என்பது ஐதீகம்.

எனவே அவர்கள் இருக்கும் இந்த 15 நாட்களும் நாம் என்ன செய்தாலும் அதை கவனத்துடன் செய்ய வேண்டும். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மூலம் இரைக்கும் தண்ணீர் அவர்களின் தாகத்தை தீர்க்கும். சாதத்தில் எள் கலந்து வைப்பதன் மூலம் அவர்களுக்கு பசி தீரும் என சொல்லப்படுகிறது.
பித்ருக்களின் அருளை பூரணமாக பெறும் முக்கிய காலம் இந்த மகாளய பட்சம் ஆகும். பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வரும் நம் முன்னோர்கள் அவர்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டால் நமக்கு ஆசி வழங்குவார்கள். இந்த காலகட்டத்தில் காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். இதனால் பித்ரு தோஷங்கள் இருந்தாலும் அவை நீங்கும்.
மகாளய பட்சத்தின் போது செய்யக் கூடியவை எவை:
- இந்த 15 நாட்களும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- சைவ உணவுகளையே சாப்பிட வேண்டும்.
- தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
- முன்னோர்கள் வீட்டில் நம்மோடு இருப்பதால் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
- பசுக்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
மகாளய பட்சம் காலத்தில் செய்யக் கூடாதவை எவை:
- வீடுகளில் குப்பைகளை சேகரித்து வைத்தல் கூடாது
- உணவில் வெங்காயம், வெள்ளை பூண்டு சேர்க்கக் கூடாது.
- யாருடனும் வாக்குவாதம் செய்தல் கூடாது, சண்டை சச்சரவுகளை செய்து முன்னோர்கள் ஏன்தான் இந்த வீட்டிற்கு வந்தோம் என நினைக்க வைக்கக் கூடாது.
- மகாளய பட்சம் காலதத்தில் புதிய பொருட்களை வாங்கக் கூடாது, சுப காரியங்களில் ஈடுபட கூடாது.












Click it and Unblock the Notifications