இறந்தவர் வீட்டுக்கு சென்று வந்தால் குளிப்பது ஏன்? எண்ணெய் குளியல் மகத்துவம்.. தோஷம் நீக்க இது போதுமே
சென்னை: எண்ணெய் தேய்த்து குளிப்பது குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் என்னென்ன? ஆண்கள், பெண்கள், எந்த நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது நல்லது? கோயிலுக்கு சென்று வந்ததும் குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்ல என்ன காரணம்? இறந்தவர் வீட்டுக்கு சென்று வந்ததுமே குளிக்க சொல்ல என்ன காரணம்? ஆண்கள், பெண்கள் எந்த நாளில் தலைக்கு குளிக்கலாம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதாகும்.. உடலிலுள்ள உஷ்ணம் நீங்கும்.. வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு எண்ணெய்க் குளியல் அவசியம்.. வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளும்போது, சரும துவாரங்களிலும் அழுக்குகள் வெளியேறும்.. வேனல் கட்டிகள், கொப்புளங்கள், வேர்க்குரு, என எந்த தொந்தரவும் நெருங்காது.. சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

எண்ணெய் குளியல் பயன்கள்
எண்ணெய் குளியல் நிம்மதியான தூக்கத்தை தரக்கூடியது.. இதனால் தலைமுடியும் வலுவடையும்.. உடல் வலி இருப்பது போன்று தோன்றினால் எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளலாம்.. மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதிப்படுபவர்களுக்கும் எண்ணெய் குளியல் நல்லது என்பார்கள்.
ஆன்மீகத்தை பொறுத்தவரை, உடல் உஷ்ணத்தை தரக்கூடிய சூரியன் மற்றும் செவ்வாயால் உண்டாகக்கூடிய உஷ்ண கோளாறுகள் எண்ணெய் குளியலால் நீங்கிவிடும்.. எனவே, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என 3 எண்ணெய்களையும் சமமாக கலந்து, தலையில் தேய்க்கலாம்.
3 எண்ணெய் முக்கியம்
சனி பகவானுக்கு உரிய தானியம் எள் என்பதால் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய்யே தலைக்கு தேய்க்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகுகிறது, சனியினால் ஏற்படும் எலும்பு நோய்கள், வாதம் போன்றவை நீங்குகிறது அத்துடன் புதனால் ஏற்படும் நரம்பு நோய்களும், சரும நோய்கள் நீங்குகின்றன.
ஆண்கள் புதன், மற்றும் சனிக்கிழமைகளில் குளிக்கலாம்.. திங்கள், வெள்ளியில் எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதமும், செவ்வாய் கிழமைகளில் குளித்தால் முதுகெலும்பு, மாலைக் கண் நோயும், வியாழக்கிழமைகளில் குளித்தால் கால் குடைச்சலும் ஏற்படுமாம்.
இறந்தவர் வீடு
பெண்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, அறிவு விருத்தியடையும்.. செல்வம், புகழ் பெருகும்.. திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் என்றால் அனைத்து செல்வங்களும் உண்டாகும் என்பார்கள்.. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் வீட்டிலுள்ள செல்வம் வெளியேறிவிடுமாம்.
பெரும்பாலும், உச்சந்தலையில் தண்ணீர் படும்போது, உடம்பிலுள்ள சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்துள்ள கதிர்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்படுவிடும்.. இறந்தவர் வீட்டில், சவம் கிடக்கும் இடத்தில் உள்ள கதிர்கள் உடம்பில் படர்ந்திருக்கும் என்பதால்தான், இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க சொல்கிறார்கள்.
அதேபோல, கோயிலுக்கு போய் வந்தவுடன் குளிக்க கூடாது என்பார்கள்.. ஏனென்றால், கோயில் என்பது நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் இடமாகும்.. ஒருஇடம். அங்குள்ள கதிர்வீச்சை, குளித்து தண்ணீருடன் கலந்து வீனாக்கக் கூடாது என்பதால்தான், கோயிலிலிருந்து வந்ததும் குளிக்க கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.












Click it and Unblock the Notifications