வராரு வராரு அழகர் வராரு.. வைகை ஆற்றில் கள்ளழகர் கால் பதிக்கும் நேரம்..மே 5ல் மதுரையில் விடுமுறை
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரையில் பல லட்சம் பக்தர்கள் கள்ளழகரை காண வருவார்கள் என்பதால் மே 5ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண அழகர் மலையில் இருந்து மதுரைக்கு வருகிறார் கள்ளழகர். மே 2ஆம் தேதி மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 3ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. அதே நாளில்தான் அழகர்மலையில் இருந்து கண்டாங்கி புடவை கட்டி கையில் வேல் கம்புடன் அதிர்வேட்டு முழங்க புறப்படுகிறார் கள்ளழகர்.

அழகர்மலையில் இருந்து மதுரை வரும் வழியெங்கும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு மே 4ஆம் தேதியன்று அதிகாலையில் மதுரைக்குள் நுழைகிறார் கள்ளழகர். புதூர் அருகே மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். அன்றைய தினம் இரவு தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கும் அழகருக்கு நள்ளிரவில் திருமஞ்சனம் நடைபெறும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து சித்ரா பவுர்ணமி நாளான 5ஆம் தேதி அதிகாலையில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். கள்ளழகரை காண பல லட்சம் மக்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள். கள்ளழகர் எழுந்தருளுவதை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு மே 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 5ஆம் தேதியன்று காலையில் வைகை ஆற்றங்கரை ஓரத்திலேயே குதிரை வாகனத்தில் வண்டியூருக்கு செல்வார் கள்ளழகர். மே 6ஆம் தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். மே 6ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் மதுரைக்கு வந்த நோக்கம் நிறைவேறியதும் அன்றைய தினம் நள்ளிரவு இராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மே 7ஆம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அழகர். அன்று பிற்பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லாக்கில் புறப்படுவார். இராமநாதபுரம் மன்னர் சேதபதி மண்டபத்தில் தங்கும் கள்ளழகர் மே 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை நேரத்திலும் வந்து வழியனுப்பி வைப்பார்கள். மே 9ம் தேதி காலையில் கள்ளழகர் அழகர் கோயிலுக்கு வந்தடைகிறார்.












Click it and Unblock the Notifications