நாளை சூரசம்ஹாரம்.. கந்த சஷ்டி விரதம் 6ம் நாளில் ஒளிரும் ச, ர, வ, ண, ப, வ தீபம்.. நைவேத்தியம் இதுதான்
சென்னை: கந்தசஷ்டி விரதத்தின் 6வது நாளான நாளை, முருகப்பெருமானை எப்படி வணங்க வேண்டும்? 6ம் நாள் விரதத்தின் விசேஷ சிறப்புகள் என்னென்ன? இந்த பூஜையை எப்படி, எந்த நேரத்தில் மேற்கொள்ளலாம்? இதை பற்றியெல்லாம் சுருக்கமாக பார்க்கலாம்.
கந்த சஷ்டி தினத்துக்கு முன்பு வரும் பிரதமை முதல் 6 நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து விரதத்தை இருப்பது ஒருமுறையாகும்.. அப்படி முடியாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் 6 மிளகையும் 6 கை நீரையும் குடிக்கலாம்..

கந்தசஷ்டி: உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இதுவாகும்.. அதனால், உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் 2 வேளையும் குளிர்ந்த தண்ணீரில் நீராடி பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூ வைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் காட்ட வேண்டும். சஷ்டியில் 7 நாட்களும் அருகிலுள்ள முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தை கேட்பதும் மிகவும் நல்லதாகும்.
சஷ்டி விரதம் : சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எக்காரணம் கொண்டும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது... யாரையும் திட்டவோ, கோபமாக பேசவோ கூடாது. அந்தவகையில், கந்தசஷ்டி விரதத்தின் 5வது நாள் இன்று நவம்பர் 6ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருகின்றனர்..
விரதத்தில் ஈடுபடுவோர், ஷட்கோண கோலத்தின் மத்தியில் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, அதைச்சுற்றிலும் உள்ள 6 நட்சத்திரங்களில் "சரவண பவ" என்று எழுதி, முதல் நாளில் "ச" என்ற எழுத்தின் மீதும், 2வது நாளில் "ர" என்ற எழுத்தின் மீதும், 3வது நாளில் "வ" என்ற எழுத்தின் மீதும், 4வது நாளில் சரவணபவ எழுத்துக்களில் "ண" என்ற எழுத்தின் மீதும், தீபம் ஏற்றி வழிபட்டனர்..
வழிபாடுகள்: இன்று 5ம் நாளில் "ப" என்ற எழுத்தின் மீதும் தீபம் ஏற்றி வணங்கி வருகிறார்கள். இன்று வேலுக்குரிய தினம் என்பதால், தேன், திணை மாவு, பழங்களை நைவேத்தியமாக படைத்து, தானத்தையும் செய்து வருகின்றனர்.
நாளை 7ம்தேதி, கந்தசஷ்டியின் 6வது நாள் விரதமாகும்.. சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நாளைதான் நடக்கிறது.. எனவே, நாளை முழுவதுமே முழு விரதம் கடைப்பிடிக்கலாம்.. ஒருவேளை முழுவிரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
தீபங்கள்: நாளைய தினம் ஷட்கோண கோலத்தில் 6 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.. அதாவது, "ச,ர,வ,ண,ப,வ" என்ற 6 எழுத்திலும் தீபம் வைத்து வழிபட வேண்டும்.. கந்தனின் படத்திற்கு பூக்களால் அலங்கரித்து வழிபட வேண்டும்.
நாளை மாலை 4.30 மணிக்கு பிறகே சூரசம்ஹாரம் நடக்கிறது.. எனவே, மீண்டும் ஒருமுறை சூரசம்ஹாரம் முடிந்ததும் குளிக்க வேண்டும்.. அதற்கு பிறகு மீண்டும் 6 தீபங்களையும் ஏற்றி, பூஜிக்க வேண்டும். மீண்டும் சுவாமிக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்..
நைவேத்தியம்: பால், பழம் அல்லது சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், கற்கண்டு சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அல்லது சர்க்கரை பொங்கல் மட்டுமே வைத்தும் வழிபடலாம். சூரசம்ஹாரம் நிறைவடைந்ததுமே, மாலையில் மட்டுமே நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக படைத்த பொருட்களை, நாள் முழுவதும் உபவாசம் மேறகொண்ட பக்தர்களுக்கு வழங்கலாம்.












Click it and Unblock the Notifications