சூரசம்ஹாரத்தின் ஸ்பெஷாலிட்டி.. திருச்செந்தூரில் சேவலும், மயிலும், வேலும் எப்படி வந்தன? பிளந்த மாமரம்
சென்னை: நாளை சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடக்க உள்ளது.. முருக பக்தர்கள் தூத்துக்குடியில் குவிந்து வருகிறார்கள்.. சூரசம்ஹாரத்தின் நிகழ்வுகளின்போது, சேவலும், மயிலும் முக்கிய இடத்தை பெறுவது ஏன் தெரியுமா? அதனை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஆணவம் முற்றிலும் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால், எந்த ஆன்மாவும் அந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பதே கந்த சஷ்டி உணர்த்தும் வாழ்க்கையின் ரகசியம். அந்த ஞானத்தை பெற்றுத் தரக்கூடியதுதான் கந்த சஷ்டி விரதமாகும். முருகபக்தர்கள் 6 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்..

நெற்றிக்கண்: அசுரர்களை அழிப்பதற்காக, சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தெறித்த அக்னியில் அவதரித்த முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான்... அரக்கர்களை வதம் செய்வது, ஆன்மீக தலமான திருச்செந்தூரில் நடக்கிறது.
சிவந்த நிறத்தை கொண்ட முருகன், உறைந்துள்ள தலம் என்பதால்தான், இந்த இடத்திற்கு "செந்தில்" என்ற பெயர் வந்ததாம்.. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம் என்றெல்லாம் திருச்செந்தூர் இதற்கு முன்பு அழைக்கப்பட்ட பெயர்களாகும்.
திருச்செந்தூர்: கந்தனின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம், இந்த திருச்செந்தூராகும்.. இந்த கோவிலின் ராஜகோபுரம் வாசல் வருடம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தாலும், சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.. அதேபோல கடற்கரை ஓரத்தில்தான் சூரசம்ஹாரம் நடக்கும்.
முருகனின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற, சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மணப்பாடு என்ற இடத்தில் கொண்டாடப்படும். இதற்கு முன்பு இந்த இடம், "மாப்பாடு" என்று அழைக்கப்பட்டதாம்.. எக்காரணம் கொண்டும், வீரத்தை வைத்து முருகனை வெல்ல முடியாது என்று நினைத்த சூரபத்மன், தன்னுடைய சூழ்ச்சியை உபயோகித்து மாயையால் வெல்ல முடிவு செய்தான். அதற்காகவே மாமரமாகி உருமாறி நின்றான்.
சூரபத்மன் : ஆனால், வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், அசுரனை வெல்ல ஞானவேலாக மாறியது. மாமரமாக மாறிய சூரபத்மனை வேலாயுதத்தால் முருகப்பெருமான் இரண்டாக பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், இன்னொன்று மயிலாகவும் மாறியது. மாமரத்தின் வடிவில் சூரன் நின்றதால்தான், திருச்செந்தூர் பகுதிகளில் மாமரம் வளர்வதில்லை என்பார்கள். இறுதியில், மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார் முருகப்பெருமான்.
நாளை சஷ்டியின் 6ம் நாள் என்பதால், பால், பழம் அல்லது சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், கற்கண்டு சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அல்லது சர்க்கரை பொங்கல் மட்டுமே வைத்தும் வழிபடலாம். சூரசம்ஹாரம் நிறைவடைந்ததுமே, மாலையில் மட்டுமே நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பிறகு நைவேத்தியமாக படைத்த பிரசாதத்தை, உபவாசம் இருந்த பக்தர்களுக்கு வழங்கலாம்.












Click it and Unblock the Notifications