கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ஆம் நாளான இன்று விநாயகர் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தீபத் திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை என்றாலே அண்ணாமலையார் தீபம்தான். ஆண்டுதோறும் திருகார்த்திகை தீபத்தன்று அந்த மலையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. பஞ்சபூதங்களில் நெருப்பாக காட்சியளிக்கும் அண்ணாமலையார் கோயில் தீபம் 11 நாட்களுக்கு அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும்.

இதை 20 கிமீ சுற்றளவு தூரத்து மக்கள் கண்டு களிக்கலாம். இந்த வைபவம் வரும் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவானது கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
அதையொட்டி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதியுலாவும் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது. கார்த்திகைத் தீபத்தின் 6ஆம் நாளான நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்தில் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது 63 நாயன்மார்களின் வீதியுலாவும் நடந்தது. நாயன்மார்களை சுமப்பதற்காகவே அதிகாலையிலேயே பள்ளி மாணவர்கள் கோயிலுக்கு வந்தனர்.
அவர்கள் 63 பேரையும் தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதியில் சென்றனர். அவர்களை தொடர்ந்து திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் வீதியுலாவும் நடந்தது. நேற்று இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் , பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வெள்ளித் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வு என்பது தேரோட்டம் ஆகும். காலை 6 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அது போல் விநாயகர் தேருக்கு பின்னால் முருகர் தேர் வீதியுலாவும் நடந்து வருகிறது.
தேரோட்டத்தை காண மாட வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். இதை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் செல்லும். இவரை சிறுவர், சிறுமியர் இழுப்பார்கள்.
இந்த தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளிக்கிழமை அதிகாலை கோயிலில் பரணி தீபமும் மாலையில் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. இந்த கோயிலில் சொக்க பானை கொளுத்துவதில்லை.












Click it and Unblock the Notifications