ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்.. சபரிமலையில் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?
சபரிமலை: ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலையில் இருமுடி சுமந்து கொண்டு நாள் கணக்கில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு காரணம் என்ன? கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம் போர்டு என்ன செய்யப்போகிறது?
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மாதந்தோறும் பூஜைக்காக 5 நாட்கள் திறக்கப்பட்டாலும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய இந்தியா முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலைக்கு மாலை போட வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டது.

மண்டல பூஜைக்கு 15 நாட்கள் மட்டுமே உள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் 22 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் வரும் வாகனங்கள் எரிமேலி, கன்னமாலா, லாஹா உள்ளிட்ட பல பகுதிகளில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பம்பை மணப்புரம் பகுதிகளில் 4 மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். பம்பையில் இருந்து சன்னிதானம் சென்றடைவதற்கு 14 மணி நேரம் ஆவதாக பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர். சபரி பீடத்தில் இருந்து பதினெட்டாம் படி வரையிலான பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தந்திரி கண்டலேரு மகேஷ் மோகனாருவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதற்கு பிறகு தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் தரிசன நேரத்தை அதிகரிக்க கேரள உயர்நீதிமன்றமும் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சாதாரணமாக ஒரு நாளைக்கு 17 மணி நேரமாக இருந்த தரிசன நேரம் தற்போது 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்வதற்கும், பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறைவதற்கும் வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது. இதன் படி, நேற்று முதல் மாலை 4 மணிக்கு பதிலாக, ஒரு மணி நேரம் முன்னதாக பகல் 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
வழக்கமாக சபரிமலை ஐயப்பன் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக பகல் 1 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு தான் கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு, நடைசாத்தப்படும்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவியதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரைக்குமே கொரோனா கட்டுப்பாடுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அமலில் இருந்தது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்பட்ட பக்தர்கள் மட்டுமே பலத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் கை குழந்தைகள் முதல் 100 வயது பாட்டி வரைக்கு சபரிமலைக்கு மாலை அணிந்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக ஆன்லைன் புக்கிங் மூலம் 90,000 பேரும், நேரடி புக்கிங் மூலம் 30,000 பேரும் தரிசனத்திற்கு வருகின்றனர். இந்த முறை குழந்தைகள், பெண்கள், வயதானர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதால் கூட்ட நெரிசலில் 18 ம் படி ஏறுவதற்கு அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் 18ம் படி ஏறுவதற்காக காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தினசரி சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 75,000 ஆக குறைக்க வேண்டும் என போலீசார், தேவசம் போர்டுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் கோரிக்கையை தேவசம்போர்டு நிறைவேற்றுமா? கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications