ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் தர்ப்பணம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ராமநாதபுரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிர்லிங்க தலமாக பக்தர்களால் போற்றப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். அம்மனின் சேது சக்தி பீடம், ராமர் வழிபட்ட தலம் , பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம் , சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் அதி சிறப்பு வாய்ந்த அற்புத சிவஸ்தலம் ராமேஸ்வரர் ராமநாதசுவாமி கோவில்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவார திருத்தலம் ஆகும். அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும். நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இங்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக வருகை தருவார்கள். அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தருவார்கள். பல்வேறு சிறப்புகள் கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா 13ஆம் தேதி தொடங்கியது.
வரும் 17ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு ராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 21ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சியும் 23ஆம் தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
வரும் 24ஆம் தேதி அன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். 29ஆம் தேதி அன்று சுவாமி அம்பாள் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு ஆடி திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதனிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தர்ப்பணம் அளிப்பதற்காக ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரும் 22 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சிய ர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications