மதுரை சித்திரை திருவிழா! பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கிய இஸ்லாமியர்கள்! நெகிழ்ச்சி!
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் ரோஸ்மில்க், இனிப்புகளை வழங்கினர்.
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 29ஆம் தேதி இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்றைய தினம் வில்லாபுரத்தில் உள்ள பாகற்காய் மண்டபத்தில் மீனாட்சியம்மனும் சொக்கநாதரும் காலை 9 மணி அளவில் எழுந்தருளினர்.

மாலை 6.30 மணிக்கு பாகற்காய் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட மீனாட்சி அம்மன் வீதி உலா மீண்டும் தெற்கு வாசல், சின்னக்கடை வீதி, மறவர் சாவடி வழியாக சென்று மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தெற்கு வாசல் முஹைதீன் ஆண்டவர் தர்கா முன்பு பள்ளிவாசல் நிர்வாகத்தால் சித்திரை திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு ரோஸ்மில்க், இனிப்புகளை வழங்கினர்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள், காவல் துறையினருக்கும் பள்ளி வாசல் சார்பில் ரோஸ்மில்க் வழங்கப்பட்டது. இந்த உபசரிப்பை அவர்கள் 15 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்களாம். இந்து- முஸ்லீம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் பழகுகிறார்கள்.
மதுரை சித்திரை திருவிழாவில் நிலவும் ஒற்றுமை, இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த விழாவில் வரும் 6ஆம் தேதி பட்டாபிஷேகமும், 7 ஆம் தேதி திக் விஜயமும் 8 ஆம் தேதி திருக்கல்யாணமும், 9 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
அம்மன் வீதியுலாவின் போது மசூதிக்கு வெளியே இஸ்லாமியர்கள், பக்தர்களுக்கு நீர் மோர், ரோஸ்மில்க் வழங்கி வந்தனர். அப்போது அந்த உதவியை பாராட்டி அம்மனுக்கு சாற்றப்பட்டிருந்த மாலையை எடுத்து இஸ்லாமியருக்கு சிவாச்சாரியார் அணிவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications