Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நூறு ஆண்டுகளுக்குப்பின் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர்..மகிழ்ச்சியில் மதுரை மக்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சித்திரை திருவிழா மதுரையில் களைகட்டியுள்ளது. வைகையில் இறங்க மதுரைக்கு வரும் கள்ளழகர் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மே 5ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்க உள்ளதை முன்னிட்டு ஆயிரம் பொன் சப்பரம் அற்புதமாக தயாராகி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5ஆம் நாளான நேற்றைய தினம் தங்க குதிரை வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் வலம் வந்தனர்.

Madurai Chithirai thiruvizha 2023: Kallazhagar wakes up in Aayiram Pon Chapparam Madurai people are happy

வரும் 30ஆம் தேதி பட்டாபிஷேகமும்,மே 2ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. 3ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளதால் சுவாமி அம்மன் தேர்கள் தயார் நிலையில் உள்ளன.

வைகையில் இறங்குவதற்காக கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மே 3ஆம் தேதி புறப்பாடாகிறார். திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரும் இந்த திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்தினம் இரவு தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்கு எழுந்தருள்வது வழக்கம்.

இதற்காக திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் ஆயிரம் பொன் சப்பரம் செய்யப்பட்டது. காலப்போக்கில் பராமரிப்பு எதுவும் செய்யப்படாததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அழகர் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இருந்தாலும் இந்த ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் பணியை சம்பிரதாயமாக அழகர் கோவில் நிர்வாகம் ஆண்டுதோறும் செய்து வருகிறது.

இந்த சப்பரத்திற்கு ஆயிரம் பொன் சப்பரம் என்று பெயர் வந்தது ஏன் என்பது பற்றி சுவாரஸ்ய சம்பவம் உள்ளது.
மதுரையை ஆட்சி செய்து வந்த திருமலைநாயக்கர், அழகர்கோயில் கள்ளழகருக்கு அழகியதொரு தேரினைச் செய்து காணிக்கையாக்க விரும்பினார்.

அழகர் கோயிலில் ஏற்கெனவே தேர் இருப்பதால் புதிய தேர் செய்வது ஆகம விதிகளுக்கு முரணானது என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் கூறினர். எனவே தேர் போன்ற அமைப்பில்தான் ஏதேனும் ஒன்றைச் செய்து அழகருக்குக் காணிக்கையாக்க நினைத்த திருமலைநாயக்கர், சிற்ப சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த சிற்பி ஒருவரைக் கொண்டு அழகான சப்பரம் ஒன்றைச் செய்து அழகருக்குக் காணிக்கையாக அளித்தார்.

தான் நினைத்ததை விடவும் மிக அழகான வடிவமைப்பில் அந்தச் சப்பரம் அமைந்துவிடவே மனம் மிகவும் மகிழ்ந்த திருமலை நாயக்கர், சப்பரத்தைச் செய்த சிற்பிக்கு ஆயிரம் பொன்னை பரிசாக அள்ளித் தந்தார். எனவேதான் இந்தச் சப்பரத்துக்கு ஆயிரம் பொன் சப்பரம் என்ற பெயர் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

பல ஆண்டு காலமாகவே கள்ளழகர் வைகை ஆற்றில் சப்பரம் இல்லாமல் தங்க குதிரை வாகனத்திலேயே எழுந்தருளுகிறார். இருப்பினும் சம்பிரதாயம் முறைப்படி இன்றளவும் ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் சப்பர முகூர்த்தத்துடன் திருவிழா தொடங்குகிறது.

அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சப்பரம் முகூர்த்தமாக பணி தொடங்கியது. இந்த ஆண்டு சம்பிரதாயமாக அந்த சப்பரத்தை சிறிதாக செய்யாமல், பழங்கால முறைப்படி பாரம்பரியம் மாறாமல் பிரமாண்டமாக செய்யும் நோக்கத்தோடு, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவில் துணை ஆணையர் ராமசாமி நடவடிக்கையின் பேரில் தற்போது ஆயிரம் பொன் சப்பரத்தை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கூறினார்.

நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆயிரம் பொன் சப்பரம் பாரம்பரிய முறைப்படி தயாராக உள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர். இது குறித்து பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு வருவார். இதற்காக திருமலை நாயக்கர் மன்னர் தனது ஆட்சிக்காலத்தில் ஸ்தபதியை அழைத்து ஆயிரம் பொன் சப்பரத்தை செய்தார்.

100 ஆண்டுகளுக்கு முன் இந்த சப்பரத்தில் அழகர் எழுந்தருளினார். ஆனால் காலப்போக்கில் சப்பரம் பயன்படுத்தபடவில்லை. இதன் பெருமையை அறிந்து தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஆயிரம் பொன் சப்பரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெறும் என்று கூறியுள்ளனர். வைகை ஆற்றில் இறங்கும் முன்பாக கள்ளழகர் என்ன கலர் பட்டு கட்டுவாரோ என்று எதிர்பார்ப்பு எழும் இந்த ஆண்டு ஆயிரம் பொன் சப்பரத்தில் என்ன கலர் பட்டு கட்டி அழகர் வைகையில் இறங்கப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+