வைகையில் இறங்க வரும் கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..காரணம் என்ன?
விருதுநகர்: மதுரை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவை மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சித்ரா பவுர்ணமி நாளில் வெகு விமரிசையாக நடைபெறும். வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவற்றை சூடிக்கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளுவார். இது பலநூறு ஆண்டுகாலமாக நடந்து வரும் நிகழ்வாகும்.

மகாவிஷ்ணுவின் 108 திவ்விய தேசங்களில் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் தலமும் ஒன்று! ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. மேலும் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகும். மேலும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு பேர் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊராக ஸ்ரீவில்லிபுத்தூர் திகழ்கிறது. ஆண்டாள் பூமாதேவியின் அம்சம். துளசி வனத்தில் அவதரித்தவர்.
கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள். நந்தவனத்தில் பறித்த பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தாம் சூடிப்பார்த்து இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். தந்தை பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு அணிவிப்பார்.
ஒருநாள் இறைவனுக்கு கட்டிய மாலையில் ஒரு நீளமான தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை மாலையாக கட்டி பெருமாளுக்கு சூட்டினார். உடனே இறைவன், கோதை சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு என்று கேட்டு வாங்கி அணித்தார். இறைவனையே விரும்பி மணந்து அவரோடு ஐக்கியமானார் ஆண்டாள் நாச்சியார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். எனவேதான் இன்றைக்கும் பெருமாளுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு கருட சேவையின் போது ஆண்டாள் சூடி கொடுத்த மாலை, கிளி அணிவிக்கப்படுகிறது.
நாளைய தினம் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகளை கொண்டு செல்லும் நிகழ்ச்சி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.பின்னர் ஆண்டாளுக்கு மாலை, கிளி, பரி வட்டங்கள் அணிவிக்கப்பட்டது.

ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை எடுத்து கூடையில் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானைமீது வைத்து கோவில் பிரகாரத்தில் உள்ள வெளிபுறத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் கோவில் பட்டர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவற்றை காரில் எடுத்து மதுரைக்கு கொண்டு சென்றனர்.
அழகர் மலையில் இருந்து மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு இது காலையில் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. வழிநெடுகிலும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் இன்றிரவு தங்குகிறார். இன்று நள்ளிரவில் திருமஞ்சனம் முடிந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டுதான் தங்க குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகையில் இறங்குவார். கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவத்தை காண ஏராளமானோர் மதுரைக்கு வந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications