அழகர் கோவிலில் நாளை ஆடித்தேரோட்டம் பார்க்க ரெடியா?.. மதுரை, மேலூரில் இருந்து ஸ்பெஷல் பஸ்
மதுரை: கள்ளழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. பக்தர்களின் வசதிக்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் மேலூரில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 24ஆம் தேதி காலையில் மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தத்தால் விசேஷ அபிஷேகமும் நடைபெற்றது.
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. அப்போது கொடிக்கம்பம் அருகில் நின்ற சுந்தரவல்லி கோவில் யானை துதிக்கையை தூக்கி ஆசிர்வதித்தது. இதனையடுத்து இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. தினசரியும் அலங்கரிப்பட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார்.

நேற்றிரவு புஷ்ப சப்பரத்தில் அருள்பாலித்தார் கள்ளழகர். இன்று இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நாளை செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது. நாளை காலையில் 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி, தேவியர்களுடன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனர். நாளை இரவு பூப்பல்லக்கும், 2ஆம் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், ஆகஸ்ட் 3ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் அழகர் கோவில் ஆடித்திருவிழா நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications