தங்க பல்லாக்கில் பாவக்காய் மண்டபம் வந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்..தாகம் தணித்த இஸ்லாமியர்கள்
மதுரை: சித்திரை திருவிழாவில் பக்தியுடன் மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. வில்லாபுரம் பாவற்காய் மண்டபத்திற்கு தங்க பல்லாக்கில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் வந்தார் மீனாட்சி அம்மன். சுவாமி அம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தனித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா சிறப்பானது. 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் சுவாமியும் அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் 4ம் நாள் நிகழ்வாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் தங்கியிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியவிடையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமியும் அம்மனும் தங்க பல்லாக்கில் வில்லாபுரத்திற்கு வந்து எழுந்தருளுவது ஏன் என்பதற்கு ஒரு காரணம் உண்டு.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழகப்ப பிள்ளை, தானப்ப பிள்ளை ஆகியோர் எத்தனையோ கைங்கர்யங்களை செய்துள்ளனர். இவர்கள் மீனாட்சி கோயிலுக்கு செய்த சேவைகளை கண்டு வியந்த பாண்டிய சேனாதிபதி, அவர்களது வேண்டுகோள் கேட்டார். தங்கள் ஊருக்கு அம்மையும் அப்பனும் ஒருநாள் வந்து தங்கி அருளவேண்டும் என அவர்கள் பதிலுரைத்தனர். அன்றுமுதல் இந்த நான்காம் நாள் மண்டகப்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வில்வமரங்கள் நிறைந்த ஊர் என்பதால் வில்வபுரம் என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது வில்லாபுரம் என வழங்குகின்றனர்.
மக்கள் பாவங்களை காய்த்து போக்கச் செய்வதால் மண்டபத்துக்குப் பெயர் பாவக்காய் மண்டபம். பாவக்காய்கள் நிவேதனமாக இறைவனுக்கு மக்கள் அளித்து வந்ததால் இந்தப் பெயரானது என்றும் கூறுகின்றனர். மதுரை தெற்குவாசலை அடுத்த வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படிக்கு இறைவனும் இறைவியும் பல்லக்கில் காலையில் வந்து தங்குவது வழக்கமாயிற்று. மீண்டும் மாலை புறப்பட்டு இரவு கோயிலை அடைவர். அன்றைய தினம் மாசிவீதி சுற்றுவதில்லை. சின்னக்கடைத்தெரு வழியாகவே சென்று வருவர்.

நேற்றைய தினம் நான்காம் நாள் வில்லாபுரம் சுவாமி மண்டகப்படி முழுக்க சுற்றுவட்டார பக்தர்கள் வந்து கூடிநின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து சின்ன கடை வீதி, தெற்கு வாசல் வழியாக நடைபெற்ற வீதியுலா, இறுதியாக கோயிலை சென்றடைந்தது. வீதி உலாவின் போது பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காகவும் ஏராளமானோர் குடிநீர் பந்தல்களை அமைத்தும் அன்னதானமாக பிரசாதங்களை வழங்கியும் வருகின்றனர்
பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் மத நல்லிணக்கத்தோடு மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கப்பட்டது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்த சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கும் பக்தர்களுக்கும் செய்யும் தொண்டு அந்த மகேசனுக்கும் அன்னை மீனாட்சிக்கும் செய்யும் தொண்டு என்பதை அனைவரும் அறிவார்கள்தானே.












Click it and Unblock the Notifications