Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகா சிவராத்திரி.. கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம்.. ஓடி ஓடி சிவனை தரிசிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் விழாக்களும் விசேஷங்களும் குமரி மாவட்டத்தில் நிறையவே உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில், மகா சிவராத்திரி நாளில், 12 சிவாலயங்களை தரிசித்து வழிபடும் சிவாலய ஓட்டம் என்ற நிகழ்ச்சி வெகு பிரபலம். நேற்று முதல் ஓடி ஓடி பக்தர்கள் சிவ ஆலயங்களை தரிசனம் செய்து வருகின்றனர். எங்கும் கோவிந்தா கோபாலா என்ற முழக்கம் எதிரொலிக்கிறது.

12 சிவ ஆலயங்கள்: மகா சிவராத்திரியன்று பக்தர்கள் உறங்காமல் விரதம் இருந்து சிவனை தரிசிப்பார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்கிற 12 சிவாலயங்களை சிவராத்திரிக்கு முதல்நாளான நேற்றில் இருந்து ஓடி ஓடி தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள்.

Mahashivarathiri 2024 Kanniyakumari Mahashivarathiri Sivalaya Ottam Purana Story

ஹரியும் சிவனும்: சிவாலய ஓட்டம் என்று பக்தியோடு அழைக்கப்படும் இந்த ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து கொண்டு பங்கேற்கின்றனர். ஒரு கையில் பனை விசிறி, மற்றொரு கையில் சிறு பண முடிப்பும் வைத்துக்கொண்டு ஓடி ஓடி தரிசிக்கின்றனர். அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலேயே இந்த சிவாலய ஓட்டம் அமைந்துள்ளது. ஏன் இந்த ஓட்டம் என்று கேட்டால் அதற்கொரு சுவாரஸ்யமான புராண கதையை கூறுகின்றனர் குமரி மாவட்ட மக்கள்

பீமனும் புருஷாமிருகமும்: இடுப்புக்கு மேலே மனித வடிவமும், இடுப்புக்கு கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படி உருவம் எடுத்தார் என்பார்கள். புருஷாமிருகம் சிவபக்தன். விஷ்ணு என்றால் ஆகாது. தனது எல்லைக்குள் எவரேனும் திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கிவிடும். தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது! என்று நம்பியவர் பீமன். புருஷாமிருகத்துக்கும் பீமனுக்கும் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்த ஸ்ரீகிருஷ்ணர் நினைத்து அதற்கு ஒரு நாடகம் நடத்தினார்.

ருத்ராட்சங்கள்: ஒருமுறை தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி? எனத் தயங்கினார் பீமன். ஆனால் கிருஷ்ணரோ, பயப்படாதே. உன்னிடம் பன்னிரெண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும், புருஷாமிருகம் பூஜையில் இறங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்! என்றார்.

கோவிந்தா கோபாலா: திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவதவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது அங்கு வந்த பீமன், கோவிந்தா... கோபாலா!... என்று கூவினான். இந்த சத்தத்தில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், கோவிந்தா, கோபாலா என்று மீண்டும் குரல் எழுப்பினார். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி.

12 சிவாலயங்கள்: ஓடி ஓடி பதினோரு இடங்களைக் கடந்து பன்னிரெண்டாவது இடமான திருநட்டாலம் என்ற இடத்தில் ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. பீமனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன் உன் எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு! என்றார். அப்போது, அங்கே வந்த தர்மரிடம் நியாயம் கேட்டார்கள்.

சிவ தத்துவம்: தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், பாரபட்சம் பாராமல், ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே! என்றார். அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், அரியும் சிவனும் ஒன்றே! எனும் தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் உதவியது.

ஹரியும் சிவனும் ஒன்று: இந்தப் புராண நிகழ்வைக் குறிக்கும் வகையில், மகா சிவராத்திரி நாளில், பன்னிரெண்டு சிவனுடைய திருக்கோயில்களை தரிசிக்க சிவாலய ஓட்ட தரிசனத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று, மாலை அணிந்து, விரதம் இருப்பார்கள். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள்.கோவிந்தா... கோபாலா எனும் கோஷமிட்டபடி குமரி மாவட்டம் திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். இப்படியாக ஓடி பன்னிரெண்டு சிவன் ஆலயங்களையும் தரிசிப்பார்கள்.

12 ராசிகளுக்கான சிவ ஆலயங்கள்: 12 ராசிகளுக்கான கோயிலாக இந்த 12 சிவாலயங்கள் அமைந்துள்ளது அது போன்று 12 நீர் நிலைகளும் இந்த கோயில் அருகே காணபடுகிறது. உலகில் வேறெங்கும் நடக்காத நிகழ்வான 12 சிவாலயங்களுக்கு 110 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து சிவ பெருமானை தரிசித்து செல்கின்றனர். தமிழகம் உட்பட கேரளாவை சேர்ந்த ஐந்து லட்சம் பக்தர்கள் மேல் இந்த புனித யாத்திரையில் பங்கேற்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+