மகா சிவராத்திரி.. பிரதோஷம்.. சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்.. என்னென்ன கட்டுப்பாடுகள்
விருதுநகர்: மகா சிவராத்திரி, மாசி மாத தேய்பிறை பிரதோஷம், மாசி அமாவாசை தினங்களை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மகா சிவராத்திரி தினமான இன்றைய தினம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். கோடை காலம் என்பதால் வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் சித்தர்கள் வாழும் பூமி என்று போற்றி வணங்கப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை பவுர்ணமி நாட்களில் 8 தினங்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் மார்ச் 8 வெள்ளிக்கிழமை முதல் வரும் 11ஆம் தேதி திங்கட்கிழமை வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்லலாம் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது. எனவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் எதிர்பாராத மழை பெய்தால் சதுரகிரி மலைக்கு செல்லும் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி கோவிலில் இரவில் தங்கி வழிபட அனுமதி வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இது குறித்து வனத்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் என்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications