திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 20: இன்றுடன் முற்று! நாளை முதல் திருப்பள்ளியெழுச்சி!
திருப்பாவை - பாடல் 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும் பக்தனுக்கு கஷ்டம் என்றால் அவர்களுக்கு முன்பு ஓடி போய் நிற்பவர் கலியுக தெய்வமாகும். அப்படிப்பட்ட தெய்வமே நீ எழுந்திருவாயா! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக! லட்சுமிக்கு நிகரானவளே! எங்களுக்கு விசிறி கண்ணாடி ஆகியவற்றையும் உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக!

விளக்கம்: ஆயர்குலப் பெண்கள் கண்ணனின் குணங்களையும் நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள். இந்த உடல் என்பது வாடகை வீடு போன்றது, எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
திருவெம்பாவை பாடல் - 20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். ஆதியும் நீ அந்தமும் நீ! முதலும் நீ முடிவும் நீ, எல்லா உயிர்களையும் படைக்கும் உங்கள் பொற்பாதங்களை அடைகிறோம். உயிர்களை அழிக்கும் தொழிலை செய்து இறுதி காலத்தை தரும் இணையற்ற திருவடிகளை போற்றுகிறோம். விஷ்ணுவாலும் பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் கண்டு பெருமிதமடைகிறோம். உன்னுடன் ஐக்கியமாகி, அந்த நினைவுகளுடன் நீர் நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.
விளக்கம்: திருவெம்பாவை இந்த பாசுரத்துடன் முடிகிறது. இதுதான் கடைசி பாடல். நாளை முதல் திருப்பள்ளியெழுச்சியை மாணிக்கவாசகர் பாடுகிறார்.












Click it and Unblock the Notifications