ஓம் நமச்சிவாய! சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா தேரோட்டம் இன்று!
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பங்குனி பெருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். பிரசித்தி பெற்று விளங்கும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கோர் வருவர். அந்த வகையில் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி பெருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த கொடியேற்றத்தின் போது கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமாள் அருள்பாலித்தனர். இந்த நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நாளை 63 நாயன்மார்களோடு வீதி உலா வருதல், மார்ச் 25 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கும்.
மார்ச் 26ஆம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும் மார்ச் 27ஆம் தேதி திருமுழுக்குடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவின் 10 நாட்களுக்கு பகல், இரவில் வீதி உலா நடைபெறுகிறது. தேரோட்ட தினமான இன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications