முருகன் திருக்கல்யாணத்தில்! கலசத்தில் வைத்த திருமாங்கல்ய தேங்காய்! ரூ 3 லட்சத்திற்கு ஏலம்
தேனி: தேனி மாவட்டம் போடியில் பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவில் கலசத்தில் வைக்கப்பட்டிருந்த தேங்காய் ரூ 3.03 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆண்டுதோறும் கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் போகும்.
போடியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் மிகவும் பழமைவாய்ந்தது.350 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து பிடி மண் எடுத்து வரப்பட்டு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இங்கு ஆடிக் கிருத்திகை, கார்த்திகை தீபம், கந்த சஷ்டி விழா உள்ளிட்ட விசேஷங்கள் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது.
இந்த விழாவில் கடந்த 7ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது. சூரசம்ஹாரத்திற்கு பிறகு முருகனுக்கு தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
இந்த திருக்கல்யாணம் அனைத்து முருகன் கோயில்களிலும் நடந்த நிலையில் போடி கோயிலிலும் நடந்தது. இந்த திருக்கல்யாணத்திற்காக கலசம் வைக்கப்பட்டது. அதில் இருந்த தேங்காய் மீது முருகன் தெய்வானை திருக்கல்யாணத்திற்கான திருமாங்கல்யம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த தேங்காய் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ 6001 என தொடங்கியது. அப்படியே படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை தாண்டியது. மேலும் பக்தர்கள் பணத்தை அதிகரித்த வண்ணம் இருந்தனர். இதனால் கடைசியாக ரூ 3.03 லட்சத்தை அடைந்தது. அதை போடி ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் தம்பதி ரூ 3.03 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர்.
கடந்த ஆண்டு நடந்த கந்த சஷ்டி விழாவின் போதும் கூட முருகன் திருக்கல்யாணத்தின் போது ஒரே ஒரு தேங்காய் ரூ 65 ஆயிரத்திற்கு ஏலம் போனது. தற்போது 3 லட்சத்திற்கு போனதுதான் அதிகபட்ச விலையாகும். இந்த ஏலத்தொகையை கேட்ட பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முருகனை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications