வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுதா..பணத்தை இப்படி பயன்படுத்துங்க..பீரோவில் அள்ள அள்ள குறையாது!
கடன் பிரச்சினை பலரது கழுத்தை நெறிக்கிறது. பண வருமானம் அதிகரிக்கவும் கடன் தீரவும் சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
சென்னை: பணம் சம்பாதிப்பதற்காக இன்றைக்கு பலரும் சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்று கொண்டிருக்கின்றனர். தினசரி கூலியாக இருந்தாலும் மாத சம்பளமாக இருந்தாலும் பணமானது கையில் வாங்கிய நேரத்தில் பையில் கூட போட முடியாத அளவிற்கு பறந்து போய் விடும். என்னதான் பட்ஜெட் போட்டாலும் அதில் துண்டு விழும். பல நேரங்களில் கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டியிருக்கும். பணம் நம் வீட்டிலேயே தங்குவதற்கும், கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்கவும் ஆன்மீக ரீதியாக சில பரிகாரங்களை செய்ய வேண்டியிருக்கும்.
நாட்டில் பட்ஜெட் போட்ட பிறகு வீட்டில் மாத மாதம் போடும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுதே என்று பலரும் கவலைப்படுவார்கள். நாம் பணத்தை பயன்படுத்தும் விதத்தில்தான் அந்த பணம் நம்முடைய வீட்டில் தங்கும். பொதுவாக நம்மிடம் வரும் பணத்தை நாம் மதிக்க வேண்டும். ஊதாரித்தனமாக செலவு செய்யக்கூடாது.

பணத்தை நாம் யாருக்காவது கொடுக்கும் போது தலைப்பகுதியை பிடித்துக்கொண்டு தர வேண்டும். பணத்தை நேராக ஒரே வரிசையில்தான் அடுக்க வேண்டும் தலைகீழாக மாற்றி மாற்றி அடுக்கக் கூடாது. பணத்தை, மணி பர்சில் வைக்கும் போது கூடவே சிறிதளவு பச்சைக் கற்பூரம் கலந்து வைப்பது நல்லது.
மகாலட்சுமியின் அருளைப் பெற பணத்தை எச்சில் தொட்டு எண்ணக்கூடாது. சில்லறைகாசுகளை வீட்டில் சிதறவிடக்கூடாது. பணத்திற்கான மதிப்பையும் மரியாதையும் தர வேண்டும்.
வீட்டில் பீரோ, அலமாரி போன்றவை வடகிழக்கு மூலையான ஈசான்ய மூலையை பார்த்து இருப்பது நல்லது. பணத்தை ஒரே இடத்தில் வைத்து எடுத்து செலவு செய்யுங்கள். பணம் அதிகம் பெருகும்.
வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம் வருவது சிறப்பு. அந்த நாளில் வரும் பணத்தை சிறிதளவு சேமியுங்கள் செல்வம் பலமடங்காக பெருகும். அதே போல பரணி, பூரம், பூராடம், புனர்பூசம் விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பணத்தை சேமித்து வைத்தால் பணம் பெருகும். வியாழக்கிழமை குரு ஓரை, வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை நேரத்தில் பணத்தை சேமிக்கத் தொடங்கினால் சேமிப்பு அதிகரிக்கும்.
கோவில்களில் யாகசாலையில் போடப்பட்ட நாணயங்கள், சுவாமியின் காலடியில் வைத்து தரப்பட்ட நாணயங்களை பீரோவில் மஞ்சள் துணியில் முடிந்து வையுங்கள் நல்ல மாற்றம் உண்டாகும்.
நம்முடைய வீட்டிற்குள் பணம் காசு வருவது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நம் வீட்டில் இருப்பவர்களின் மன நிம்மதியும் மிகவும் முக்கியம். சிலரது வீட்டில் பணம் காசு இருக்கும் நிம்மதி இருக்காது நோய்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கடன் பிரச்சினையும் காலை சுற்றிக்கொண்டே இருக்கும். பிரச்சினைகள் நீங்கி நிம்மதி கிடைக்க சிறிய உருளியில் பூக்களை போட்டு வைப்பது நல்லது. தாமரைப்பூவாக இருந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பண வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
பணத்தட்டுப்பாடு நீங்கவும் கடன் பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும் திருவாவடுதுறை தலம் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்யலாம். திருஞானசம்பந்தர் எழுதிய திருவாவடுதுறை பதிகத்தை தொடர்ந்து 48 நாட்கள் படித்து வர பணத்தேவைகள் நிறைவடையும். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ. ஒரு கிளைப் பாதையில் நடந்து சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் சிவ ஆலயங்களில் காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்கலாம். சிவப்பு நிற துணியில் மிளகு தீபம் ஏற்றி வழிபட கடன் பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications