Aadi Amavasai: இன்று ஆடி அமாவாசை! ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயில் நடை பகல் முழுவதும் திறப்பு
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று (ஆடி அமாவாசை) பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை, மதியம் 1 மணிக்கு மூடப்பட்டு, பின்னர் 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். ஆனால், இன்று மதிய நேரத்தில் கோயில் நடை மூடப்படாமல், பகல் முழுவதும் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவிழா நிகழ்வுகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நேற்று (4ஆம் நாள் விழா): காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
- இன்று (6ஆம் நாள் விழா - ஆடி அமாவாசை): காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப் பல்லக்கிலும், அதைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னி தீர்த்தக் கடற்கரைக்குத் தீர்த்தவாரி பூஜைக்காக எழுந்தருள்கிறார்கள்.
- நாளை (7ஆம் நாள் விழா - வெள்ளிக்கிழமை): இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.
- 27-ஆம் தேதி (9ஆம் நாள் விழா): காலை 10 மணிக்கு அம்பாள் தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.
- ஆகஸ்ட் 4ஆம் தேதி: சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோயிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ராமேஸ்வரம் திருத்தலம் ஒரு புண்ணியத் தலமாகும். இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தங்கள் முன்னோர்களுக்குத் திதி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில்களிலும் ஆடி அமாவாசை விழா நடைபெறுகிறது. அது போல் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலையிலேயே நீர் நிலைகளில் திரண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications