திருப்பதியில் மினி பிரம்மோற்சவம்.. பிப்ரவரி 16ல் ரத சப்தமி.. 7 வாகனங்களில் உலா வரும் மலையப்பசுவாமி
திருப்பதி: மினி பிரம்மோற்சவம் என்று பக்தர்களால் போற்றப்படும் ரத சப்தமி விழா பிப்ரவரி 16ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் கொண்டாடப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்தில் நடக்க இருக்கும் சிறப்பு உற்சவங்கள் குறித்த விபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள் திருமலையில் நடைபெற உள்ளன.

பிப்ரவரி 09 புரந்தரதாசர் ஆராதனை உற்சவம்,பிப்ரவரி 10ஆம் தேதி திருக்கச்சிநம்பி உற்சவம், பிப்ரவரி 14 வசந்த பஞ்சமி விழா, பிப்ரவரி 16ஆம் ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது.
திருமலை திருப்பதியில் உறையும் ஸ்ரீவெங்கடேசப் பெருமானுக்குத் தினந்தோறும் திருவிழாதான். எப்போதும் சர்வ அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகளை ஏற்றுக்கொண்டிருப்பவர் திருப்பதி ஏழுமலையான். என்றாலும், திருப்பதியின் பெருமைக்குப் பெருமை அங்கு பிரமோற்சவம், ஜென்மாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கங்கம்மா சத்ரா போன்ற பல திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் விஷேசமான திருவிழா ரதசப்தமி திருநாள் ஆகும்.
பிப்ரவரி 19ஆம் தேதி திருக்கச்சிநம்பி சாத்முறை, பிப்ரவரி 20ஆம் தேதி பீஷ்ம ஏகாதசி, பிப்ரவரி 21ஆம் தேதி குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம், பிப்ரவரி 24 ஆம் குமாரதாரா தீர்த்தமுக்கோட்டி, மாசி பவுர்ணமி கருடசேவை பக்தர்கள் இந்த தேதிகளை குறித்து வைத்துக் கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் தங்களின் தரிசன மற்றும் திருப்பதி பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பதியில் நடக்கும் மிக முக்கியமான உற்சவங்களான வசந்த பஞ்சமி, ரத சப்தமி ஆகியன பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளதால் பிப்ரவரி மாதத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ரதசப்தமி என்பது மகா சப்தமி என்றும் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் தென் திசையிலிருந்து வட திசைக்கு நகர்த்தி செல்லும் காலத்தின் துவக்கமாக இந்த ரத சப்தமி அமைகிறது. சூரிய பகவானின் ஏழு குதிரைகளும் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் 12 சக்கரங்களும் 12 ராசிகளையும் குறிக்கும் வண்ணம் அமைகிறது.
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி நாளில் காலை முதல் இரவு வரை 7 வாகன சேவைகளில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். கோவிலின் நான்கு மாடவீதிகளில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வரும் போது வாகன வீதிஉலாவுக்கு முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெறுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
பிப்ரவரி 16ம் தேதி திருச்சானூரிலும் ரதசப்தமி விழா நடைபெற உள்ளதால் பக்தர்கள் கூட்டம் திருப்பதி, திருமலை ஆகிய இடங்களில் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத சப்தமி விழாவிற்காக திருமலையிலும் திருச்சானூரிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications