திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட் வெளியிடும் தேதியில் மாற்றம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பொதுவாக மாதந்தோறும் 24 அல்லது 25 ஆம் தேதிகளில் இந்த ரூ 300 டிக்கெட் வெளியிடப்படும் நிலையில் தேதியிலும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை காலங்களில் திருப்பதிக்கு லட்சணக்கானோர் வருகை தருகிறார்கள். திருப்பதிக்கு ரூ 300 தரிசனம், நடைபாதை, இலவச தரிசனம், ஆர்ஜித சேவைகள் மூலமாக பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானை கண் குளிர தரிசிக்கிறார்கள்.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி, ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் டிசம்பர் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கும், மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன ரூ 300 டிக்கெட்டுகள் வரும் 26ஆம் தேதி காலை 11 மணிக்கும் வெளியிடப்படும்.
அது போல் திருமலையில் உள்ள தங்கும் அறைகள் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான கோட்டாக்கள் வெளியிடப்படும். திருமலையில் மட்டுமில்லை திருப்பதியிலும் தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கும் என தெரிகிறது. ஆனால் ஏப்ரல், மே மாதங்களில்தான் இந்த கூட்டம் அதிகரித்து தர்ம தரிசனத்திற்கு 2, 3 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அது போல் இன்றைய தினம் கல்யாணோத்சவம், ஆர்ஜித சேவை, ஊஞ்சல் சேவை, தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில் கல்யாணோத்சவத்திற்கு ரூ 1000, ஆர்ஜித சேவை, தீபலங்கார சேவை,ஊஞ்சல் சேவைகளுக்கு தலா ரூ 500 செலுத்த வேண்டும். ஒரு ஐடியில் அதிகபட்சமாக இரு டிக்கெட்டுகள் வரை மட்டுமே புக் செய்ய முடியும்.
அங்கப்பிரதட்சிணம், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு வரும் 23 ஆம் தேதி டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம்.
அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications