சபரிமலை.. ஐப்பசி மாத பூஜைக்காக 17ல் நடை திறப்பு.. புதிய மேல் சாந்தி யார்?
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 17ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார். கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜையும் தை மாதத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

மாதந்தோறும் தமிழ், மலையாள மாத பிறப்பை ஒட்டி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17ஆம் தேதி மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். பின்னர், அக்டோபர் 18ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.
ஐப்பசி மாத பூஜையின் போது வரும் ஆண்டிற்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில், மாளிகைப்புறத்து அம்மன் கோவிலில் பணியாற்றும் மேல் சாந்தி தேர்வு நடைபெற உள்ளது. 22ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோவிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக இணைய முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் அக்டோபர் 17ஆம் தேதி முதல் செயல்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள் பூஜைக்காக நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடைதிறந்திருக்கும். இதனையடுத்து நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications