சபரிமலை ஐயப்பன் கோவில்.. கூட்டம் கூடினாலும் வருமானம் குறைவுதானாம்.. தேவசம்போர்டு தகவல்
சபரிமலை: மண்டல பூஜை காலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலையில் ரூ.63 கோடி வருமானம் குறைவாகவே இருப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக நவம்பர் 17ம் தேதி திறக்கப்பட்டது. மண்டல பூஜை துவங்கியதில் இருந்தே கடும் மழை, பனி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

டிசம்பர் 6ம் தேதிக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறினர். தலையில் இருமுடியோடு 22 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்ய முடியாததால், திரும்பி சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யாமல் பக்தர்கள் பந்தளத்தில் இருந்து திரும்பி வருவதாக செய்திகள் வெளியாகின.
விரதம் இருந்து யாத்திரை சென்ற ஐயப்பபக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து, விலையுயர்ந்த மாலையை கோவிலில் இருந்து அகற்றிவிட்டு, பந்தளத்தில் இருந்தே தரிசனம் பெறாமல் மணிக்கணக்கில் காத்திருந்துவிட்டு திரும்பிசென்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மண்டல பூஜை தினமான இன்று 70ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பக்தர்கள் கூட்டமும் சரி, உண்டியல் வருமானமும் சரி இந்த ஆண்டு குறைவாகவே கிடைத்துள்ளது சமீபத்தில் தேவசமண போர்டு தெரிவித்திருந்தது. டிசம்பர் 25ம் தேதியுடன் நிறைவடைந்த மண்டல பூஜை காலத்தில் 39 நாட்களில் ரூ.204.30 கோடி வருமானமாக கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது ரூ.63.89 கோடி குறைவு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவண பாயசம் விற்பனையின் மூலம் ரூ.96.32 கோடியும், அப்பம் உள்ளிட்ட மற்ற பிரசாத விற்பனையின் மூலம் ரூ.12.38 கோடி கிடைத்துள்ளதாகவும், கடந்த 39 நாட்களில் 31,43,163 பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 41 நாட்களாக நடைபெற்று வந்த சபரிமலை மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்று மாலை மண்டல பூஜை நடத்தப்பட்டு, இரவு 11 மணியுடன் கோவில் நடை சாத்தப்படும். அதன் பிறகு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
ஜனவரி 15ம் தேதி மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும். அதற்கு பிறகு ஜனவரி 20ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 21ம் தேதி காலை நடைபெறும் பூஜையில் பந்தள மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு நடை அடைக்கப்பட்டு பந்தள மன்னர் குடும்பத்தினரிடம் கோவில் சாவி ஒப்படைக்கப்படும்.












Click it and Unblock the Notifications