சபரிமலையில் நாளை மகரஜோதி.. மலைகளில் கூடாரமிட்ட பக்தர்கள் - 10 இடங்களில் தரிசிக்கலாம்.. முழு விபரம்
சபரிமலை: மகர ஜோதி தரிசனத்தைக் காண சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாளைய தினம் ஜோதி வடிவத்தில் காட்சி தரும் ஐயப்பனை பக்தர்கள் தரிசிப்பதற்காக 10 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மகர மாத பிறப்பை முன்னிட்டு சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நாளைய தினம் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

நாளை 15ஆம் தேதியான திங்கள் கிழமை அதிகாலை 2.46 மணிக்கு மகர சங்கர பூஜையுடன் தொடங்கி வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு நெய் அபிஷேகம் ஆகியவை நடைபெற உள்ளது.
மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் உச்சிகால பூஜைக்கு பிறகு 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு சன்னிதானம் முழுவதும் தூய்மை செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.
நாளைய தினம் மாலையில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. ஜோதி வடிவத்தில் காட்சி தரும் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தேவசம்போர்டும் கேரள அரசும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதேநேரத்தில் மகர ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக சபரிமலையில் 10 இடங்களை தேவசம்போர்டு தேர்வு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் பிரசாந்த், மகர விளக்கு நாளில் அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மகர ஜோதி தினத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மகர ஜோதியை தரிசிக்க வசதியாக சபரிமலையில் பாண்டித்தாவளம், குடிநீர்தொட்டியின் முன் பகுதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன் பகுதி, பி.எஸ் என்.எல் அலுவலகத்தின் வடக்கு பக்கம், கொப்பரைக் களம், சன்னிதானத்தின் திருமுற்றம், மாளிகைப்புரம் கோவிலின் சுற்று பகுதிகள், அப்பாச்சி மேடு, அன்னதான மண்டபத்தின் முன் பகுதி உள்பட 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.
அந்த பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்யலாம் என்றும் பிரசாந்த் கூறியுள்ளார். அதேநேரம் ஜோதி தரிசனம் செய்ய கூடாரம் அமைத்து தங்கியுள்ள பக்தர்கள் தீ பந்தம் கொளுத்தவும், உணவு சமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications